Publish Date: Tue, 24 Jun 2008 (16:16 IST)
Updated Date: Tue, 24 Jun 2008 (16:14 IST)
உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 9 விழுக்காடாக இருக்கும் என்று திட்ட குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.
புது டெல்லியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவது கடினம். ஏனெனில் எண்ணெய் விலை உயர்வை சமாளிப்பது, விலை ஏற்றத்தை நுகர்வோருக்கு மாற்றுவது, திறனை அதிகரிப்பது, பெட்ரோலிய எண்ணெயை மட்டுமே நம்பி இருக்கும் நிலையை மாற்றி, வேறு எரிசக்தி வளத்தை கண்டறிவது மிக முக்கியமானது என்று அலுவாலியா கூறினார்.
பணவீக்கம் அதிகரித்து வருவது பெரிய பிரச்சனை என்று கூறிய அலுவாலியா, இதனால் நமது வளர்ச்சி குறிக்கோளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
எண்ணெய் விலை உயர்வின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி அலுவாலியா கூறுகையில், இந்த விலை ஏற்றத்தை நாம் எப்படி கையாள்கின்றோம் என்பதை பொறுத்தே, வளர்ச்சியை பாதிக்குமா, பாதிக்காதா என்பது உள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சிதைக்காமலேயே, இந்த நிலைமை சமாளிக்க முடியும் என்று திட்டக்குழு கருதுகிறது என்றார்.
அடுத்த மூன்று அல்லது ஆறு மாதங்களில் என்ன நடக்கும் என்பதை கூறுவது கடினமானது என்று சுட்டிக்காட்டிய அலுவாலியா தற்போதைய கச்சா எண்ணெய் விலை நிலவரத்திலேயே, வளர்ச்சி விகிதம் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று அலுவாலியா கூறினார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த மூன்று வருடங்களாக 9 விழுக்காடாக உள்ளது. இது இந்த ஆண்டில் குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
Webdunia
Publish Date: Tue, 24 Jun 2008 (16:16 IST)
Updated Date: Tue, 24 Jun 2008 (16:14 IST)