Publish Date: Sat, 21 Jun 2008 (15:49 IST)
Updated Date: Sat, 21 Jun 2008 (15:49 IST)
பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்ததால் பணவீக்கம் 11.05 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்ததுதான் என்று மத்திய நிதி அமைச்சப் ப.சிதம்பரம் கூறினார்.
பணவீக்கத்தை பற்றி செய்தியாளர்களிடம் சிதம்பரம் கூறுகையில், விலை உயர்வை தடுக்க, பொருட்கள் தாராளமாக கிடைக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். இது சிரமமான காலம். அரசு கஷ்டங்களை உணர்ந்துள்ளது. நாங்கள் பொருளாதார ரீதியாக பலமான நடவடிக்கை எடுக்க உள்ளோம். நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தும்போதே, அமைச்சரவையில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை தொடும் என்று எச்சரித்தோம். இப்போது அது தான் நடந்துள்ளது. பணவீக்கம் அதிகரித்திருப்பதே எதிர்பார்த்தே என்று கூறிய சிதம்பரம், பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசும், ரிசர்வ் வங்கியும் எந்த மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப் போகிறது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.