Publish Date: Tue, 01 Apr 2008 (15:13 IST)
Updated Date: Tue, 01 Apr 2008 (15:12 IST)
உலக பொருளாதார வீழ்ச்சியால், முதலீட்டாளர்கள் பொறுமை காப்பது எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
சிங்கப்பூரில் லீ குவான் யே பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதி அமைச்சர் கூறுகையில், "உலக பொருளாதார வளர்ச்சி குறைவு, பணவீக்கம், முதலீட்டின் மீதான குறைவான வட்டி போன்றவை வளரும் நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய நிதிநிலை அறிக்கை உள்நாடு, அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி மீதி நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 விழுக்காடாக உயரும் என்றும் எதிர்பார்க்கிறேன்
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள வருமான வரி குறைப்பு, கல்வி, சுகாதரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, நிறுவனங்களின் கடன் சந்தை விரிவாக்கம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது" என்றார்.
இயற்கை எரிபொருள் தயாரிப்புக்காக உணவு தானியங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்து அமைச்சர் கூறுகையில், "அமெரிக்காவில் 20 விழுக்காடு தானியங்கள் இயற்கை எரிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதற்கு உதாரணமாக எண்ணெய் பொருட்களின் விலை உயர்வு உலகளவில் சிக்கனத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
கட்டாய கல்வி, ஆரோக்கிய மேம்பாடு, நிலையான வாழ்க்கை முறை, பொது சுகாதாரம், முழு வேலைவாய்ப்பு ஆகிய சமுதாய குறிக்கோள்களை மையப்படுத்தி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமையும் என்று ப சிதம்பரம் உறுதி அளித்தார்.