Newsworld Finance News 0802 28 1080228019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிதம்பரத்தின் பட்ஜெட்டில் சலுகைகள் தொடருமா?

Advertiesment
பட்ஜெட் நிதி அமைச்சர் சிதம்பரம் விலைவாசி
, வியாழன், 28 பிப்ரவரி 2008 (14:39 IST)
அதிகரித்து வரும் விலைவாசி, பேருந்து, கல்வி, மருத்துவம் முதல் மனிதர்களுக்கு தேவையான அத்தனைக்கும் கட்டண அதிகரிப்பு.

தினம் தினம் சுமைகளை தாங்கி, விழி பிதுங்கி நிற்கும் பெருவாரியான மக்களுக்கு நாளை மக்களவையில் தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் சிதம்பரம் என்ன தீர்வுகளை அறிவிக்கப்போகிறார் என்பதே தீவிர எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு, இது வரை இல்லாத அளவு அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகரிப்பு, பணவீக்கம் கட்டுப்பாட்டில், அந்நிய முதலீடு குவிகின்றது, இந்தியாவில் மருத்துவம் செய்து கொள்ள அந்நிய நாட்டில் இருந்து நோயாளிகள் வருகை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இளம் தலைமுறையினரின் வருவாய் கூடியுள்ளது, இது வரை இல்லாத அளவு இந்தியா முழுப் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டு செல்கின்றது என்று பெருமைகளை அடுக்கி திருப்தி பட்டுக் கொள்வாரா?

அல்லத

கடன் சுமையால் தினமும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், விளை பொருளுக்கு நியாயமான விலை கிடைக்காத காரணத்தினால் அவதியுறும் விவசாயிகள், அதே நேரத்தில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், உள்நாட்டு உற்பத்தி குறைந்து, அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் நிலைமை, விவசாய துறையின் வளர்ச்சிக்கு புதிய நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவாரா?

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வார?

கரும்பு, பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்து உள்ளிட்ட பணப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தொலை நோக்குடன் திட்டங்கள் அறிவிக்கப்படுமா? என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தொழில் வர்த்தக துறையினரும் அதிக அளவு பட்ஜெட்டில் எதிர்பார்க்கின்றனர்.

இடதுசாரி கட்சிகள் நீண்ட கால முதலீட்டில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு மீண்டும் வரி விதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

ஆனால் தற்போது பங்கு ஈவுத் தொகை மீது வரி விதிக்கப்படுகிறது. இத்துடன் நீண்ட கால முதலீட்டிற்கு வரி விதித்தால், சிறு முதலீட்டாளர்கள் முதல் எல்லா தரப்பினரும் பாதிக்கப்டுவார்கள். எனவே வரி விதிக்க கூடாது என்று கூறிவருகின்றனர்.

நிதி அமைச்சர் இடது சாரிகளின் கோரிக்கையை ஏற்று வரி விதிப்பாரா அல்லது இப்போதைய நிலையே தொடர அனுமதிப்பாரா என்று நாளை தெரியும்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக நஷ்டத்தை சந்திக்காமல், அதே நேரத்தில் பெட்ரோல், டீசலை வாங்கி பயன்படுத்துபவர்கள் பாதிக்காமல் இருக்க பட்ஜெட்டில் நிவாரணம் வழங்க வேண்டும். இதற்காக பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி, உற்பத்தி வரி, கூடுதல் வரிகளை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பினர் மத்தியிலும் நிலவுகிறது.
நாளை இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கும், தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை இந்த நிதி ஆண்டுடன் முடிகிறது. அந்நிய செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அத்துடன் அந்நிய நாடுகளில், குறிப்பாக அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அளித்து வரும் சலுகைகளை நீட்டிக்க வேண்டும் என்று இந்த துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களக்கு அளிக்கப்பட்டுவரும் வரி விலக்கு ரத்து செய்யப்படுமா அல்லது நீட்டிக்கபடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நிதி அமைச்சர் சிதம்பரம் நாளை சமர்பிக்கும் நிதி நிலை அறிக்கையில் சலுகைகள் நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.

கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்ற வாகன உற்பத்தி துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள், இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்கி உள்ளன. இவை வாகனங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதுடன், அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.

இவற்றால் இந்த துறை வளர்ச்சி அடைந்தாலும், மறு புறம் சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக வாகன தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்களை வழங்கும் சிறு, நடுத்தர, குறுந்தொழில்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம் இந்தோனேஷியா, கொரியா, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுடன் உள்ள தாரள வர்த்தக கொள்கைகளால், வாகனத்துறைக்கு உதிரி பாகங்கள் குறைந்த இறக்குமதி வரி அல்லது வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும். உதிரி பாகங்கள் தயாரிக்க இறக்குமதி செய்யப்படும் அதிக வலிமையுள்ள உருக்குக்கும் இறக்குமதி வரி குறைக்க வேண்டும் என்று வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

நாளை நிதி அமைச்சர் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு சலுகைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil