Publish Date: Fri, 15 Feb 2008 (13:22 IST)
Updated Date: Fri, 15 Feb 2008 (13:22 IST)
பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியின் தலைவராக சி.பி.பாவே (வயது 57) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இவர் திங்கட் கிழமை பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.
செபி (செக்யூரிட்டிஸ் எக்சேஞச் போர்ட் ஆப் இந்தியா) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள எம். தாமோதரன் பதவிக்காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
நேற்று மத்திய அமைச்சரவையின் நியமன குழு புதிய சேர்மனாக சி.பி.பாவேவை நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்தது.
முன்னதாக இவரை அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திர சேகர் தலைமையிலான பரிந்துரைத்தது.
செபியின் புதிய சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.பாவே தற்போது நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் சேர்மனாக இருக்கின்றார்.
இந்த பதவிக்கு யூ.டி.ஐ. அசெட் மேனெஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை செய்ல் அதிகாரி யூ.கே.சின்கா, கனரா வங்கியின் சேர்மன் எம்.பி.என்.ராவ், அயலுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஜமினி பகவதி ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன.
தற்போது செபியின் சேர்மனாக இருக்கும் தாமோதரன், இந்த பதவியில் மேலும் நீடிக்க விரும்பவில்லை என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
செபி சேர்மனின் பதவி காலம் மூன்று ஆண்டுகள்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.பாவே 1975 ஆம் ஆண்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவர் 1990 ஆம் ஆண்டில் ஆட்சி பணி பொறுப்பில் இருந்து விலகி, நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் சேர்மனாக பொறுப்பேற்றார்.
இவர் செபியின் சேர்மனாக ஜி.வி.ராமகிருஷ்ணா இருந்த போது, செபியில் மூத்த நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார். அத்துடன் நிதி அமைச்சகத்தின் பணியிலும் இருந்துள்ளார்.