Publish Date: Mon, 14 Jan 2008 (19:08 IST)
Updated Date: Mon, 14 Jan 2008 (19:08 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று பட்டியலிடப்பட்ட போர்வால் ஆட்டோ காம்பனென்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளின் விலை 6 விழுக்காடு அதிகரித்தது.
மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள போர்வால் ஆட்டோ காம்பனென்ட் நிறுவனம், வாகனங்களுக்கு தேவையான வார்ப்பட உதிரி பாகங்களை தயாரிக்கிறது. இது முக்கியமாக எஸ்சர் மோட்டார்ஸ், கெனடிக் மோட்டார்ஸ், போர்ஸ் மோட்டார் ஆகிய நிறுவனங்களுக்கு இரும்பு வார்ப்பட உதிரி பாகங்களை தயாரித்து வழங்கிறது.
இந்த நிறுவனம் தற்போது வருடத்திற்கு 6,600 டன் வார்ப்பட பொருட்களை தயாரிக்கிறது. இதை விரிவு படுத்தி 27,600 டன் அளவில் அதிகரிக்கவும், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இதற்காக முதலீடு திரட்ட ரூ.75 என்ற விலையில் 1 கோடியே 51 ஆயிரம் பங்குகளை வெளியிட்டது. இந்த பஙகுகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் முதன் முதலாக விற்பனைக்கு பட்டியலிடப்பட்டன. முதன் நாளே இதன் விலை ரூ.79.85 ஆக அதிகரித்தது. இது பங்கின் விலையுடன் ஒப்பிடுகையில் 6.47 விழுக்காடு அதிகம்.
இன்று நடந்த வர்த்தகத்தில் இந்த பங்கின் விலை ரூ.120 வரை அதிகரித்தது. 26 லட்சத்து 61 ஆயிரம் பங்குகள் விற்பனையானது.