Publish Date: Wed, 12 Dec 2007 (16:07 IST)
Updated Date: Wed, 12 Dec 2007 (16:05 IST)
வங்கிகள் வழங்கும் கடன் மீதான வட்டி விகிதம் குறையாது என்று பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநர் டி.எஸ்.பட்டாச்சார்யா கூறினார்.
கொல்கத்தாவில் இந்திய தொழிலக கூட்டமைப்பு பின்டெக் 2007 என்ற கருத்தரங்கு நடத்துகிறது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்துள்ள பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“அந்நிய செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. வங்கித் துறையில் நிதி குறைந்த அளவே வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் வங்கிகள் வழங்கும் கடன் மீதான வட்டியை குறைப்பது சாத்தியமில்லை.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதால் வங்கிகளில் அயல்நாடு இந்தியர்கள் வங்கிகளில் வைப்புநிதி வைப்பது குறைந்து விட்டது. இவற்றினால் கடன் கொடுப்பதற்கு பணத்தை திரட்டுவது சிரமமாக இருக்கின்றது.
அதே நேரத்தில் வங்கிகளிடம் அதிகளவு கடன் கேட்கின்றனர். இதற்கு ஏற்றார் போல் வங்கிகளால் நிதியை திரட்ட இயலவில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உரிமை பங்குகள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.