Publish Date: Mon, 12 Nov 2007 (19:54 IST)
Updated Date: Mon, 12 Nov 2007 (19:53 IST)
யூ.டி.ஐ பரஸ்பர நிதி நிறுவனம் இன்று யூ.டி.ஐ இன்ஃப்ராக்சர் அட்வான்ட்டேஜ் ஃபண்ட் - 1 என்ற பெயரில் புதிய பரஸ்பர யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது.
இதன் யூனிட்டுகளை வாங்கி முதலீடு செய்யும் தொகை, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுமத்தும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படும். மூன்று வருடத்திற்கு பிறகு, யூனிட் வாங்கியவர்களுக்கு லாபத்துடன் அவர்கள் செய்த முதலீடு திருப்பி வழங்கப்படும். இடைப்பட்ட காலத்தில் யூனிட்டுகளை விற்பனை செய்ய இயலாது.
இந்த புதிய திட்டத்தில் திரட்டப்படும் முதலீடு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனங்ளின் பங்குகளில் முதலீடு செய்யப்படும். இதே போல் உள்கட்டமைப்பு வசதிகளை நேரடியாக ஏற்படுத்தாமல், மறை முகமாக உதவும் நிறுவனங்களின் பங்குகளிலும் முதலீடு செய்யப்படும். இதிலிருந்து கிடைக்கும் லாபம் பிரித்துக் கொடுக்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீடு பல மடங்காக அதிகரிக்கும் திட்டமாகும்.
இதன் அறிமுக விழாவில் யூ.டி.ஐ யின் தலைவர் கே.மாதவ குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் செய்யப்படும் முதலீடு அதிகரித்து வருகிறது. இதற்காக மத்திய அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இதன் வளர்ச்சி அதிகரிக்க தனியார் துறைக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.
இதன் பலனை முதலீட்டாளர்கள் பெறும் வகையில், யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இந்த புதிய யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது என்றார்.
யூ.டி.ஐ யின் நிதி மேலாளர் ஸ்ரீ வத்சவா கூறுகையில், இந்த திட்டத்தில் திரட்டப்படும் முதலீடு கட்டுமானம், எரிசக்தி, இயந்திர உற்பத்தி நிறுவனங்கள், உலோக உற்பத்தி நிறுவனங்கள், தொலை தொடர்பு, போக்குவரத்து, விமான நிலையம் ஆகிய துறைகளில் முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.