Publish Date: Thu, 25 Oct 2007 (21:22 IST)
Updated Date: Thu, 25 Oct 2007 (21:22 IST)
அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் வாயிலாக பார்டிசிபட்டபரி நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான புதிய விதியை செபி அறிவித்துள்ளது.
செபி என்று சுருக்கமாக அழைக்கப்படும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் இயக்குநர்கள் கூட்டம் இன்று காலையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செபியின் தலைவர் தாமோதரன் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது :
“அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வாயிலாக பங்கேற்பு பத்திரங்கள் மூலம் பங்குச் சந்தையில் ஸ்பாட் மார்க்கெட் எனப்படும் தினசரி வர்த்தகத்தில் பங்கேற்க கூடாது. இந்த தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
டெரிவேடிவ்களில் முதலீடு செய்யும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், அவைகளின் பங்கேற்பு பத்திரக்கள் மூலம் முதலீடு செய்யும் துணை கணக்குகள் 18 மாத கால அவகாசத்தில் முடித்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மூலம் டெரிவேடிவ்களில் முதலீடு செய்வது அனுமதிக்கப்படாது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், ரொக்க பங்கு விற்பனை சந்தையில், அவைகளிடம் உள்ள மொத்த சொத்து நிர்வகிப்பு மதிப்பில் 40 விழுக்காடு மேல் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.
இவைகளின் நிர்வகிக்கும் சொத்துக்கள் செப்டம்பர் 30-ஆம் தேதியில் உள்ள மதிப்பில் கணக்கிடப்படும். இந்த கணக்கீடு இன்று மாலையில் பங்கு வர்த்தகம் முடிந்ததில் இருந்து அமலுக்கு வருகிறது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், புதிதாக பங்கேற்பு பத்திரங்கள் மூலம் பங்குகளை வாங்கும் போது, அந்த தொகை 40 விழுக்காடுகளுக்கும் அதிகமாக இருந்தால், அவை முன்பு பங்கேற்பு பத்திரங்களின் மூலம் முதிர்வடைந்த தொகைக்கு சமமாகவோ, அல்லது ரத்து செய்யப்பட்ட பங்கேற்பு பத்திரத்தின் மதிப்பிற்கு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த மதிப்பில், 40 விழுக்காடுகளுக்கு குறைவாக பங்கேற்பு பத்திரங்கள் மூலம் முதலீடு செய்திருந்தால், ஒரே சமயத்தில் மீதம் உள்ள விழுக்காடுகளுக்கு இணையான தொகையை முதலீடு செய்யக் கூடாது. அதிகபட்சமாக 5 விழுக்காடுகளுக்கு மேல் முதலீடு செய்ய கூடாது” என்று முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தாமோதரன் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Thu, 25 Oct 2007 (21:22 IST)
Updated Date: Thu, 25 Oct 2007 (21:22 IST)