Publish Date: Thu, 27 Sep 2007 (19:38 IST)
Updated Date: Thu, 27 Sep 2007 (19:37 IST)
குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் போன்ற சில நிறுவனங்கள் பெருமளவு வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் எஸ்.கே. சிங்கால் குற்றம் சாற்றினார்.
அகமதாபாத்தில் நேற்று குஜராத் வர்த்தக மற்றம் தொழில் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சிங்கால் உரையாற்றினார்.
அப்போது அவர், குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் போன்ற சில பிரிவினர் பல கோடி ரூபாய் வரி ஏற்பு செய்கின்றனர்.
இதனால் அரசு எதிர்பார்க்கும் அளவில், சிறிய அளவே வரி வசூல் செய்ய முடிகிறது. இதனால் அரசுக்கு வேறு வழியில்லாமல் இந்த வரி ஏய்ப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியதுள்ளது. இந்த மாதிரியான வர்த்தக சங்கங்கள் நேர்மையாக வரியை செலுத்தும்படி, தொழில், வர்த்தக துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்.
அரசுக்கு அதிக அளவு வரி வசூலானால் தான் அரசால் தொழில், வர்த்தக துறையினருக்கு அதிக வசதிகளை செய்து தர முடியம். தொழில் துறையும், வர்த்தக துறையும வளர்ச்சி அடையாமல், நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை. எனவே அரசு அதிகளவு உதவிகளும், ஒத்துழைப்பும் வழங்க தீர்மானித்துள்ளது.
நேர்மையாக வரிகள் செலுத்துவதால், வரி ஏய்ப்புக்காக திடீர் சோதனை, பொருட்களை கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை ஏற்படாத சூழ்நிலை உருவாகும் என்று நம்புகின்றேன்.
மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை, வரியாக 2006 - 07 ஆம் நிதியாண்டில் ரூ.1.70 லட்சம் கோடி வசூல் செய்துள்ளது. இது இலக்கை விட அதிகம் என்று கூறினார்.
முன்னதாக இந்த சங்கத்தின் தலைவர் பிரபுன் எம். ஜெய்கிருஷ்ணா, தனது வரவேற்புரையில் வரி சிரமைப்பு, வரி விகிதங்களை மாற்றுதல், விதிகளை எளிதாக்குதல் போன்றவைகளுக்காக டாக்டர் கெல்கர் குழு கொடுத்த பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும் என்று கூறினார்.