Newsworld Finance News 0705 18 1070518072_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவிரி நடுவர் மன்ற திடீர் உத்தரவு : தமிழக அரசு எதிர்க்க வேண்டும்!

Advertiesment
காவிரி நதிநீர் பகிர்வு

Webdunia

தமிழ்நாடு, கர்நாடகா இடையிலான காவிரி நதிநீர் பகிர்வு தகராறை கடந்த 16 ஆண்டுகளாக விசாரித்து வந்த நடுவர் மன்றம், நேற்று பிறப்பித்த திடீர் உத்தரவு அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது!

இந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காவிரி நடுவர் மன்றத்தின் (காவிரி நதிநீர் தகராறு தீர்ப்பாயம்) ஆயுள் முடிகிறது. அதற்குள் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று தீர்ப்பாயத்தின் தலைவராக உள்ள நீதிபதி என்.பி. சிங் கூறியிருந்தார்.

இதே கருத்தை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி ஒரு முறைக்கு பல முறை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், காவிரி நடுவர் மன்றத்தில் நேற்று விசாரணை முடிந்தபோது, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென்று ஒரு உத்தரவை நடுவர் மன்றத்தின் 3 உறுப்பினர்களில் 2 பேர் பிறப்பித்தனர்.

காவிரி நதிநீர் பகிர்வின் மீது தெளிவான தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமெனில் விசாரணையில் அளிக்கப்பட்ட விவரங்கள் போதாது என்றும், புதிதாக வல்லுநர் குழு அமைத்து சம்மந்தப்பட்ட மாநிலங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் பயிர் சாகுபடி முறைகள், பாசனப் பரப்புக்கள், தண்ணீர் தேவை ஆகியவை குறித்து விவரங்களை திரட்டி அளிக்க வேண்டும் என்று 3 உறுப்பினர்களில் 2 உறுப்பினர்கள் பெரும்பான்மை அடிப்படையிலான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

காவிரி நடுவர் மன்றத்தின் உறுப்பினர்கள் என்.எஸ். ராவ், சுதிர் நாராயணன் ஆகிய இருவரும் பிறப்பித்த அந்த உத்தரவில், 3 மாத காலத்தில் நிபுணர் குழு இந்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நடுவர் மன்றத்தின் தலைவர் நீதிபதி என்.பி. சிங் இதனை எதிர்த்துள்ளார். 1974 வரையிலும், 1974 முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலும் காவிரி நதி நீரை சார்ந்துள்ள 4 மாநிலங்களின் பாசனப் பரப்பு, சாகுபடி முறை, தண்ணீர் தேவை ஆகியன குறித்த விவரங்கள் போதுமான அளவிற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே தெளிவான தீர்ப்பை அளிக்க முடியும் என்று கூறிய நீதிபதி என்.பி. சிங், தனது சகாக்களின் இந்த உத்தரவு அதிர்ச்சி அளிக்கின்றது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நீதிபதி என்.பி. சிங் கூறியுள்ள மற்றொரு கருத்தும் மிக முக்கியமானதாகும். "பயிர்ச் சாகுபடி முறை, பாசன பரப்பு, நீர் தேவை ஆகியன குறித்த விவரங்களை 3 மாதங்களில் திரட்டிட இயலாது. அதற்கே பல ஆண்டுகள் ஆகும். அது தொடர்பான விவரங்களை அளிப்பவர்கள் மீது குறுக்கு விசாரணை செய்து முடிக்க மேலும் பல ஆண்டுகள் ஆகும்" என்று கூறியுள்ள நீதிபதி என்.பி. சிங், "2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதியே இவ்வழக்குத் தொடர்பான ஆதார ஆவணங்களின் மீது விசாரணையும், வாதங்களும் முடிந்துவிட்டது. இந்த நிலையில் எந்த அடிப்படையில் மீண்டும் புதிய ஆதாரங்களை திரட்டி அதன் மீது விசாரணை நடத்துவது என்று தெரியவில்லை" எனவும் கூறியுள்ளார்.

இதில் இருந்து ஒரு விவரம் தெளிவாகத் தெரிகிறது. தாங்கள் எடுத்த முடிவை நடுவர் மன்றத்தின் தலைவரான நீதிபதி என்.பி. சிங்கிடம் கலந்தாலோசிக்காமலேயே தன்னிச்சையாக இரண்டு உறுப்பினர்கள் பெரும்பான்மை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அது மட்டுமின்றி, இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்கப்போகிறோம் என்று என்.எஸ். ராவும், சுதிர் நாராயனும் கூறியதும், தீர்ப்பாயத்தில் இருந்த தமிழக, கர்நாடக, கேரள, புதுவை மாநிலங்களின் வழக்கறிஞர்கள் தங்களின் கருத்துக்களை கேட்டதற்குப் பிறகு உத்தரவைப் பிறப்பியுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு செவி சாய்க்காமலேயே ராவும், சுதிர் நாராயணும் உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

இது சந்தேகத்தை உருவாக்குகிறது. 4 மாநிலங்கள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினையின் அடிப்படையிலான நதிநீர் தகராறை விசாரித்து வரும் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள், எந்தவித முகாந்திரமும் இன்றி திடீரென்று ஒரு உத்தரவை தடாலடியாக பிறப்பித்திருப்பதற்கு உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகிக்க இடம் இருக்கிறது.

ஏனெனில், ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் 2001ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நடைமுறைப் படுத்தாமல் கர்நாடக அரசு தட்டிக் கழித்து வருகிறது. இந்த நிலையில், இறுதித் தீர்ப்பை தமிழ்நாடு மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால், திடீரென்று காவிரி நடுவர் மன்றத்தின் 2 உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவு இறுதித் தீர்ப்பை இன்னமும் 10 ஆண்டுகளுக்கு மேல் தள்ளிப்போடும் நிலையை உருவாக்கியுள்ளது.

அதனால்தான் இதில் உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகிக்க இடம் ஏற்படுகிறது.

இப்பொழுதுள்ள சாகுபடி முறை, பாசனப் பரப்பு, தண்ணீர் தேவை ஆகியன குறித்து புதிதாக ஆராயப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட எந்த மாநில அரசும் கேட்டுக் கொள்ளாத நிலையில், 2 உறுப்பினர்கள் தன்னிச்சiயாக பிறப்பித்த உத்தரவு நியாயச் சார்பு உள்ளதாகத் தெரியவில்லை.

2 உறுப்பினர்களின் திடீர் உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக நடுவர் மன்றத்தின் தலைவராக உள்ள நீதிபதியே கூறுகிறார் என்றால், பின்னணி ஏதோ இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

ஆகவே, தமிழக அரசு இந்த திடீர் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். அதனை உடனடியாகச் செய்ய வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது அறிக்கையில் கூறியுள்ளது போல, இது தேர்தல் காலம் என்பது தெரிந்திருந்தும் அதனை ஏன் கருத்தில் கொள்ளாமல் ஒரு வாரத்திற்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

இது தேர்தல் காலம்தான். ஆயினும் அரசியல் மாறுபாடுகளை கருத்தில் கொள்ளாமல் முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி என்ன நிலை எடுப்பது என்பதனை முடிவு செய்து தமிழ்நாட்டின் குரலை ஏகோபித்த குரலாக நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil