Publish Date: Tue, 07 Oct 2008 (13:18 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (13:16 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.48 ஐ தாண்டியது.
பெட்ரோலிய நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் அதிக அளவு டாலரை வாங்குகின்றனர். அத்துடன் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்கின்றன.
இதனால் அந்நியச் செலாவணி சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 1 டாலர் ரூ. 47.98/48.02 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 20 பைசா அதிகம். (நேற்றைய இறுதி நிலவரம் 47.82/47.83)
டாலரின் மதிப்பு ரூ.48 ஐ தாண்டிய பிறகு, ரிசர்வ் வங்கி சார்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிக அளவு டாலரை விற்பனை செய்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கியின் தலையீட்டிற்கு பிறகு டாலரின் மதிப்பு குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. 1 டாலர் ரூ. 47.76/77 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட டாலர் மதிப்பு 6 பைசா குறைந்து ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.