Publish Date: Mon, 18 Feb 2008 (11:06 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:54 IST)
ரிலையன்ஸ் பவர் நிறுவனம், அதன் பங்குகளை வாங்கியவர்களுக்கு போனஸ் பங்குகளை கொடுக்க உள்ளது.
அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் சமீபத்தில் பொது பங்குகளை வெளியிட்டது. இந்த பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ரூ.430 எனவும், மற்ற பிரிவினருக்கு ரூ.450 எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த பங்குகள் சென்ற 11 ஆம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளே வெளியீட்டு விலையை விட, ரிலையன்ல் பங்குகளின் விலை குறைந்தது. அத்துடன் தொடர்ந்து விலை குறைந்து வருகிறது. இதன் விலை சென்ற வெள்ளிக்கிழமை ரூ.384 ஆக இருந்தது.
பங்கு ஒதுக்கீட்டு விலைக்கும் குறைவாக சந்தையில் ரிலையன்ஸ் பவர் பங்குகளின் விலை குறைந்து வருவதால், சில்லரை முதலீட்டாளர்கள் உட்பட எல்லா பிரிவு முதலீட்டாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது ரிலையன்ஸ் குழுமத்தின் மீதுள்ள நம்பிக்கையை சிதைப்பதாக அமைந்து விடும் என்று அனில் அம்பானியின் கீழ் உள்ள ரிலையன்ஸ் குழுமம் கருதுகிறது.
எனவே முதலீட்டாளர்களின் அதிருப்தியை போக்குவதற்காக, ரிலையன்ஸ் பவர் பங்குகளை வாங்கியவர்களுக்கு, போனஸ் பங்குகளை கொடுக்க முடிவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம், நேற்று நடந்தது.
இதன் பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனர்கள் தவிர, மற்ற எல்லா பிரிவு முதலீட்டாளர்களுக்கும் இலவசமாக போனஸ் பங்குகள் வழங்க பரிசீலிக்கப்படும். இதற்கான பிப்ரவரி 24 ஆம் தேதி (ஞாயிறு ) கூடும் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். அதில் போனஸ் பங்குகள் எந்த விகிதாச்சாரத்தில் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பங்குச் சந்தை வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், ஒரு நிறுவனம் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டவுடன், போனஸ் பங்குகளை அறிவிப்பது இதுதான் முதன் முறை.
ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு, வரலாறு காணாத அளவில் விண்ணப்பங்கள் குவிந்தன. பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திய, இதன் பங்குகளின் விலை, முதல் நாளிலேயே சரிந்தது. இந்த அதிரிச்சியினால் இரண்டு நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை ரத்து செய்தன. மேலும் பல நிறுவனங்கள் பங்குகளின் விலையை குறைத்தன.