Publish Date: Fri, 15 Feb 2008 (10:24 IST)
Updated Date: Fri, 15 Feb 2008 (10:22 IST)
பங்குச் சந்தைகளில் நேற்று இருந்த நிலை, இன்றும் தொடரும். நேற்று தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி அதிகரித்ததை ஆராய்ந்தால், இன்றும் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, நிஃப்டி 40 முதல் 50 புள்ளிகள் வித்தியாசத்தில் தொடங்கும். அதற்கு பிறகு 5250-5260 என்ற அளவில் வர்த்தகம் நடக்கும். இதற்கு மேல் நிஃப்டி உயர்ந்தால் நாள் முழுவதும் அதிகரிக்கும்.
நிஃப்டி 5250/5305/5350 என்ற அளவிற்கும் அதிகரித்தால், அதற்கு பிறகு 5400 வரை உயர் வாய்ப்பு உள்ளது. இது குறைந்த நேரத்திற்கு தான். ஒரு வேளை 5400 க்கும் மேல் உயர்ந்தால் புரோக்கர்கள் பங்கு விலைகளை உயர்த்தி 5500/5550 என்ற அளவிற்கு கொண்டு போய் விடுவார்கள்.
இதற்கு மாறாக பங்குகளின் விலைகள் குறைந்து, நிஃப்டி குறியீட்டு எண் 5120/5050/5025 விட குறைந்தால், அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்வார்கள். இதனால் நிஃப்டி மேலும் குறைந்து 4970/4940 என்ற அளவிற்கு இறங்கிவிடும்.
இன்று ரிலையன்ஸ் பவர், ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஜே.பி.ஹைட்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, அன்சால் இன்ஃப்ரா, பிரஜா இன்டஸ்டிரிஸ், ஹிந்த் பெட்ரோ ஆகிய பங்குகளில் அதிக அளவு ஆர்வம் செலுத்துவார்கள்.
நேற்றைய நிலவரம்
நேற்று அதிக அளவு பங்குகளின் விலையில் மாற்றம் இல்லாமல், பங்குகளின் விலைகள் சீராக இருந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் 500 புள்ளி அதிகரித்தன. இது நாள் முழுவதும் குறையாமல் இருந்தது.
மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம், இந்திய பங்குச் சந்தையும் உயர்வதற்கு காரணமாக இருந்தது. அமெரிக்காவில் ஜனவரி மாதத்தில் சில்லரை விற்பனை அதிகரித்திருப்பது, அந்த நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியை சிறிது தணித்துள்ளது.
கடந்த பல நாட்களாக பங்குகளின் விலைகளில் அதிக மாற்றம் இருந்ததை பார்த்தோம். அதிக அளவு மாற்றம் இருந்த நிலை கடந்த 2 முதல் 3 நாட்களில் மாறி வருவதை நாம் பார்க்கின்றோம். நேற்று முழுவதும் நிஃப்டி 5100 க்கும் குறையாமல் இருந்தது. மிட்கேப் பங்குகளின் விலையும் அதிகரித்தது. பொதுவாக பங்குச் சந்தைக்கு நேற்று சிறந்த நாள்.
இயந்திர உற்பத்தி, மின் உற்பத்தி நிலையங்களின் பங்குக்கு அதிக வரவேற்பு இருந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்ததால், பெட்ரோலிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தது. நேற்று மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 பங்குகளில் 29- ன் விலை அதிகரித்தது. மொத்தம் ரூ.57,198.23 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.