Publish Date: Tue, 16 Dec 2008 (13:07 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
ராமநாதபுரம்: நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற, சான்றுபெற்ற தரமான விதைகளைப் பயன்படுத்துமாறு விதைச்சான்று உதவி இயக்குநர் சி. கனகராசன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, திருவாடானை, பரமக்குடி, நயினார்கோவில், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டாரங்களில் மார்கழி பட்டத்தில் இறவைப் பயிராக நிலக்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் நிலக்கடலை விதைகளைத் தேர்வு செய்து, விதைத்து வருகின்றனர்.
நிலக்கடலை பயிரில் மகசூல் குறைவுக்குத் தரக்குறைவான விதைகளைப் பயன்படுத்துவதே காரணம். விவசாயிகள் நிலக்கடலைப் பயிர்களை சில காரணங்களினால் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அறுவடை செய்து விடுகின்றனர்.
முதிர்ச்சி அடையாத நிலக்கடலை பயிரிலிருந்து பெறப்பட்டதை அடுத்த பருவத்தில் விதைக்காக உபயோகித்து வருகின்றனர்.
இவ்வாறு விதைக்கும் போது முளைப்புத்திறன் குறைந்து பயிர் எண்ணிக்கை குறைந்தும் வீரியமற்ற செடிகளின் மூலம் மகசூல் குறைந்து விடுகிறது.
விதைக்காக பயன்படுத்தப்படும் விதைகள் திரட்சியாகவும், முதிர்ச்சியடைந்த பருப்புகளை உடையதாகவும் இருக்க வேண்டும்.
சான்று பெற்ற நிலக்கடலை விதைகளைப் பயன்படுத்துவதால் புறத்தூய்மையான நல்ல முளைப்புத் திறன் உடையதான நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பதம் உடையதாகவும் இனத்தூய்மை உடையதாகவும் இருப்பதால் வீரிய செடிகள் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
சான்றுபெற்ற விதைகளைப் பயன்படுத்துவதால் திரட்சியான பருப்புகள் நல்ல எடையுடன் கிடைப்பதால் கூடுதல் மகசூல் பெற முடியும்.
சான்று பெற்ற விதைகளை தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறுமாறு சி.கனகராசன் கேட்டுக் கொண்டார்.
Webdunia
Publish Date: Tue, 16 Dec 2008 (13:07 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)