Publish Date: Fri, 12 Dec 2008 (13:04 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (12:45 IST)
கடலூர் : கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான திட்டக்குடி வெலிங்டன் ஏரி புதன்கிழமை, பாசனத்துக்குத் திறந்து விடப்பட்டது.
திட்டக்குடியை அடுத்த கீழச்செறுவாய் பகுதியில் அமைந்து இருப்பது வெலிங்டன் ஏரி. கடலூர் மாவட்டத்தின் வறண்ட பகுதிகளான திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களைச் சேர்ந்த சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இதனால் பாசன வசதி பெறுகின்றன. புயல் உருவாகாத நிலையில், வெலிங்டன் ஏரி வறண்டு கிடந்தது.
வெலிங்டன் ஏரி பாசன பகுதி விவசாயிகளிடம், இந்த ஆண்டு ஏரி நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
நிஷா புயல் காரணமாக பெய்த மழையால், வெலிங்டன் ஏரி நிரம்பியது. இந்த பகுதி விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
வெலிங்டன் ஏரியின் நீர் மட்டம் 24.5 அடியாக இருந்து. (முழு உயரம் 29.78 அடி). இந்த ஏரியின் கரை பலவீனமாக இருப்பதால், முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியவில்லை.
வெலிங்டன் ஏரியில் இருந்து பானத்துக்குத் தண்ணீர் திறந்து விட்ட பிறகு, செய்தியாளர்களிடம் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறுகையில்,
அண்மையில் பெய்த மழையால் ஏரியில் 1,445 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரியில் இருந்து முதல் 15 நாட்களுக்கு விநாடிக்கு 250 கனஅடி வீதமும், பின்னர் 120 நாட்களுக்கு 105 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படும்.
உரம், விதை உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் போதிய அளவு கையிருப்பு வைத்து இருக்க, வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.
வெலிங்டன் ஏரிப் பாசனப் பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆழ்குழாய் கிணற்றுப் பாசனமாகவும் உள்ளது.
ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப் படுவதால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து, ஆழ்குழாய்க் கிணறுகளின் நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Fri, 12 Dec 2008 (13:04 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (12:45 IST)