Publish Date: Sat, 22 Nov 2008 (00:03 IST)
Updated Date: Sat, 22 Nov 2008 (00:03 IST)
2008-09 ஆம் ஆண்டு கரீப் பருவத்தில் 181 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களான உணவு தானியம், சமையல் எண்ணெய், சர்க்கரை போன்றவைகளின் விலையை கட்டுப்படுத்தவும் அவை எளிதாக கிடைக்கும் வகையிலும் பின்வரும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
2008-09-ம் ஆண்டு கரீப் பருவம் 01.10.2008-லிருந்து துவங்குகிறது. 20.11.2008 வரை 181 லட்சம் டன் நெல் (104.06 லட்சம் டன் அரிசி எனக் கொள்ளலாம்) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 21 விழுக்காடு அதிகமாகும்.
உணவு தானியங்களின் கையிருப்பில் சாதகமான நிலை: 01.04.2009 வரை 71.86 லட்சம் டன் கோதுமை கையிருப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரணமாக இதன் அளவு 40 லட்சம் டன்னாக இருக்கும். 01.10.2008 வரை அரிசி கையிருப்பு 65.94 லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரணமாக இது 52 லட்சம் டன்னாக இருக்கும்.
உணவு தானியங்கள் விலையை கட்டுப்படுத்துவதற்காக மேலும் அதிக அளவு தானியங்கள் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரையின் விலையை குறைப்பதற்காக இதற்கு முன்பு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. சர்க்கரையின் விலையும் உயராமல் இருக்க அவ்வப்போது அதன் விலை கண்காணிக்கப்படுகிறது.
2008-09-ம் ஆண்டு மாநிலங்களுக்கு 10 லட்சம் டன் அளவுள்ள சமையல் எண்ணெய் வகைகள் குறைந்த விலையில் விநியோகிக்கப்படவுள்ளது. இதுவரை 3.6 லட்சம் டன் அளவிற்கு மாநிலங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் சமையல் எண்ணெயின் மொத்த விலைகள் குறைந்துள்ளன. 2008 மார்ச் 17-ம் தேதியிலிருந்து சமையல் எண்ணெய் வகைகளின் ஏற்றுமதிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.