Publish Date: Wed, 19 Nov 2008 (13:40 IST)
Updated Date: Wed, 19 Nov 2008 (13:30 IST)
திருச்சி: வேளாண்மையை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையை, தமிழக அரசிடம் டிசம்பர் மாதத்தில் வழங்கப்படும் என்று மாநில வேளாண் வல்லுநர் குழுத் தலைவர் எஸ். கண்ணையன் தெரிவித்தார்.
தமிழக அரசு வேளாண்மையே மேம்படுத்தற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை கூற, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எஸ். கண்ணையன் தலைமையில் குழுவை அமைத்துள்ளது.
இந்த குழுவினர், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்ற திங்கள்கிழமை வந்தனர்.
இவர்கள் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் முன்னோடி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் எஸ். கண்ணையன் பேசுகையில், வானிலை மாற்றம் அதிகரித்துள்ளதால், பருவமழை சரியான முறையில் பெய்வதில்லை. அப்படியே பெய்தாலும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அபரிமிதமாகப் பெய்கிறது.
உலகம் முழுவதும் வெப்பநிலை 1 முதல் 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இவ்வாறு வெப்பம் அதிகரித்து இருப்பதால், விவசாயத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால், விளைநிலங்கள் பாலைவனமாக மாறி விடக்கூடும்.
எனவே, இதுதொடர்பாக உலக நாடுகளின் எச்சரிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தீர்வு காண நடவடிக்கை எடுப்பது என பிரதமர், உணவுத் துறை அமைச்சர், வேளாண் துறை வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர்' என்று கூறினார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த குழு அமைக்கப்படதன் நோக்கம், வேளாண்மையில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்வதே. இதற்காக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
விளைபொருட்களைச் சேமிப்பதற்காக குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இயந்திரங்கள் தேவை அதிகரிப்பு, விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது தனி நபரும் பயன்படும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
செம்மை நெல் சாகுபடியில் உள்ள குறைகளைக் களைந்து, முழு அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் வீணாவதை தடுக்க ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும் விலையை விளைபொருள்களுக்கு நிர்ணயிக்க வேண்டும். கடன் வசதி, சந்தை வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.
இவை உள்பட, பல்வேறு கோரிக்கைகள் கொண்ட அறிக்கையை டிசம்பர் மாத இறுதியில் அரசிடம் வழங்க உள்ளோம். என்று தெரிவித்தார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களான ராஜஸ்தான் மாநில மகா ராணா பிரதாப் வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.பி. சிங், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் (தோட்டக்கலை) எஸ். சம்பந்தமூர்த்தி, முன்னாள் துணைப் பதிவாளர் எம். சுப்பிரமணியன், முனைவர்கள் எஸ். உத்மசாமி, எஸ்.ஆர். சுப்பிரமணியன் ஆகியோரும் வந்திருந்தனர்.
Webdunia
Publish Date: Wed, 19 Nov 2008 (13:40 IST)
Updated Date: Wed, 19 Nov 2008 (13:30 IST)