Publish Date: Tue, 11 Nov 2008 (12:00 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
தஞ்சாவூர்: கரும்பு டன்னுக்கு ரூ. 2,000 வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூரில் நேற்று அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் க. சம்பந்தம் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல் குவிண்டாலுக்கு ரூ. 1,200 வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடியில் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழ்களையும், நகைக் கடன் தள்ளுபடியான விவசாயிகளுக்கு நகைகளையும் உடனே வழங்க வேண்டும்.
விவசாயத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகளில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்க வேண்டும்.
கடைமடை பாசனத்துக்கு முறை வைக்காமல் தொடர்ந்து கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.