Publish Date: Wed, 29 Oct 2008 (12:16 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (12:15 IST)
திருச்சி: சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்க டி.ஏ.பி உரம் சரக்கு ரயில் வேகன்கள் மூலம் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த உரம் ரஷியாவிலிருந்து அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டது. இது ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவிலிருந்து சரக்கு ரயில் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சரக்கு ரயில் திங்கள்கிழமை திருச்சிக்கு வந்து சேர்ந்தது. இதில் 2,601 டன் டி.ஏ.பி. உரம் உள்ளது. டி.ஏ.பி உரம் பயிர்களுக்கு அடியுரமாக பயன்படுத்தப்படுகிறது.
இவை திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகளுக்கு விநியோகிக்க, லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இத்துடன் மேலுரமாகப் பயன்படுத்தப்படும் யூரியா, ஓமன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கப்பல் மூலம் வந்து சேர்ந்த யூரியா உர மூட்டைகள் விசாகப்பட்டினம், மங்களூர் துறைமுகங்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இவையும் சரக்கு ரயில் வேகன்கள் மூலம் திருச்சி, தஞ்சாவூருக்கு கொண்டுவரப்படும். பிறகு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது.