Publish Date: Fri, 10 Oct 2008 (15:56 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
சீரகம்
உலக சந்தையில் சீரகத்தின் தேவை குறைந்துள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு சந்தையில் அதிக அளவு சீரகம் வரத்து உள்ளது.
ரபி பருவத்தின் விவசாய பணிகளுக்கு பணம் தேவை. இதனால் விவசாயிகள் அதிக அளவு சீரகத்தை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தினசரி சராசரியாக 2,500 மூட்டை விற்பனைக்கு வருகிறது. இதனால் விற்பனை மந்தமாக உள்ளது. இது 20 கிலோ கொண்ட மூட்டை ரூ.2,140 முதல் ரூ.2,100 வரை விற்பனை ஆனது.
பல மொத்த விற்பனை சந்தையிலும் சேர்த்து 20 கிலோ கொண்ட 6.8 லட்சம் மூட்டை சீரகம் இருப்பில் உள்ளது. இவை அடுத்த சில மாதங்களுக்கு விற்பனைக்கு போதுமானதாகும். தற்போது உள்ள விலையே சில மாதங்கள் தொடரும். அதற்கு பிறகு சீரகத்தின் விலை சிறிது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த மாத இறுதியில் சீரகம் பயிரிடப்படும் பகுதிகளில் விதைப்பு தொடங்கும். இந்த பணி நவம்பர் மாத இறுதி வரை தொடரும். எவ்வளவு பரப்பளவில் சீரகம் விதைக்கப்படுகிறது என்பதை பொறுத்து விலை மாற வாய்ப்பு உள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி முதல் மார்ச் வரை அறுவடை இருக்கும்.
மிளகாய்
உலக சந்தையில் மிளகாய் தேவை குறைந்துள்ளது. இதனால் இதன் விலையும் குறைந்து விட்டது. 1 குவின்டால் மிளகாய் ரூ.4,800 முதல் ரூ.5,200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மொத்த விற்பனை சந்தையில் 40 ஆயிரம் மூட்டை மிளகாய் விற்பனைக்கு வந்துள்ளது. அந்நிய நாடுகளைபே போலவே, உள்நாட்டிலும் மிளகாய் தேவை குறைந்துள்ளது. முன்பு 1 குவின்டால் மிளகாய் விலை ரூ.6 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. இதன் விலை தற்போது ரூ.5,200 ஆக குறைந்துள்ளது. தற்போது 20 லட்சம் மூட்டை வரை இருப்பு உள்ளது.
இத்துடன் மத்திய பிரதேசத்தில் இருந்து புதிய மிளகாய் வரத்து உள்ளது. இதுவே மிளகாய் விலை குறைந்ததற்கு ஒரு காரணம் எனலாம்.
ஜனவரி மாதத்தில் இருந்து ஆந்திராவில் அறுவடை முடிந்த புதிய மிளகாய் விற்பனைக்கு வரும். இந்த வருடம் மிளகாய் அதிக அளவு பயிரிடப்படும் மாநிலங்களில் பருவநிலை சாதகமாக இருப்பதுடன், தேவையான மழையும் பெய்துள்ளது.
இது போன்ற காரணங்களினால் மிளகாய் விலை குறைய வாய்ப்பு உள்ளது.