ஈரோடு மாவட்டத்தில் தக்காளி விலை அதிகரிப்பு!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
Publish Date: Fri, 19 Sep 2008 (12:03 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (11:48 IST)
ஈரோடு மாவட்டத்தில் தக்காளி விலை திடீரென அதிகரித்துள்ளதால் பெண்கள் விரக்தியடைந்துள்ளனர்.
குடும்ப பெண்கள் தங்கள் சமையலுக்கு சுவைசேர்ப்பதற்கு முக்கிய பங்கு வகிப்பது தக்காளி பழம். சாம்பார், ரசம் என அனைத்திலும் தக்காளியின் பங்கு கட்டாயம் இருக்கும். இந்த தக்காளியின் விலை தங்கம்போல் ஆகிவிட்டது. ஆம் எப்போது குறைகிறது, எப்போது உயர்கிறது என தெரியவில்லை.
கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.10 ஆக இருந்தது. இதற்கு முன் மாதம் கிலோ ரூ.4 க்கு விற்பனையானது. தற்போது இதே தக்காளி பழம் கிலோ ஒன்று ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. இதன் காரணமாக உணவு விடுதிகளில் தக்காளி சட்டினிக்கு தடை விதித்துள்ளனர்.
குடும்ப பெண்களும் தக்காளியை பயன்படுத்தும் அளவை வெகுவாக குறைத்து விட்டனர். கடந்த சில வாரங்களாக ஈரோடு மாவட்டத்தில் பெய்த தொடர்மழையே தக்காளியின் விலையேற்றத்திற்கு காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.