Publish Date: Fri, 12 Sep 2008 (11:46 IST)
Updated Date: Fri, 12 Sep 2008 (11:46 IST)
கோழி தீவனம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால், கோழி வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
கால்நடைகளின் தீவனங்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளன. குறிப்பாக கோழி தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது. தீவனம் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களான கம்பு, சோளம், குறிப்பாக மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதனால் தீவனத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
சென்ற வருடம் கோழி தீவனத்தின் விலை ரூ.500 முதல் ரூ.550 வரை இருந்தது. இதன் விலை தற்போது ரூ.900 ஆக அதிகரித்துள்ளது.
கோழித் தீவனத்தின் விலை அதிகரித்துள்ளதால், முட்டை உற்பத்தி செலவு அதிகமாகிறது. இது மாதிரியான பிரச்னைகளை சந்திக்க முடியாததால் நாமக்கல் மண்டலத்தில் கோழி வளர்ப்பு தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டால் இரவு நேரங்களில் முட்டைகளை சுத்தம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, சீரான மின்சாரம் வழங்கவும், தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோழி பண்ணை உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.