பாசனத்திற்காக பவானிசாகர் அணை திறப்பு!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
Publish Date: Sat, 16 Aug 2008 (15:02 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:09 IST)
பவானிசாகர் அணை நேற்று பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மகேசன் காசிராஜன் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை. ஒவ்வொறு வருடமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். இந்த தண்ணீர் டிசம்பர் மாதம் பதினைந்தாம் தேதிவரை பாசனத்திற்காக செல்லும்.
இதன்படி நேற்று பாசனத்திற்காக பவானிசாகர் அணை திறக்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து வைத்தார். பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
அணை திறக்கப்பட்டதும் தண்ணீர் ஆர்பரித்து சென்றது. விவசாயிகளும், பொதுமக்களும் ஓ..வென்று சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின் மடைதிறந்த வெள்ளத்திற்கு பூ தூவி வணங்கினர். முன்னதாக அணைமேல் உள்ள பவானி வினாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தினர்.
அணையை திறந்தபின் பூங்காவிற்குள் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்திற்கு இன்று பொன்னாள். கீழ்பவானி வாய்க்காலுக்கு ஒற்றை மதகுக்கும் சென்னசமுத்திரத்திற்கு இரட்டை மதகு பாசனத்திற்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி வரை தண்ணீர் செல்லும்.
இதனால் ஈரோடு மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரவகுறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். தற்போது வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது படிப்படிபயாக கூடுதலாக்கி வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கூறினார்.
தற்போது பவானிசாகர் அணையில் 99.8 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 305 கனஅடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது.
விழாவில் கோபி கோட்டாட்சியர் ராமர், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சரவணன், பவானிசாகர் யூனியன் தலைவர் சுப்பிரமணி, துணை தலைவர் ராஜேந்திரன், டவுன் பஞ்சாயத்து தலைவர் வேலுமணி, தாசில்தார் மாரிமுத்து, ரங்கசாமி, பொதுப்பணித்துறை கோவை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர்கள் பழனிசாமி, நஞ்சன்,நடராஜன், ராதாகிருஷ்ணன்,ராஜூ மற்றும் பவானிசாகர் அணை பிரிவு இளம் பொறியாளர் விவேகானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.