Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக அணைகள் நிரம்புகின்றன!

தமிழக அணைகள் நிரம்புகின்றன!
, வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (11:54 IST)
தமிழகத்திற்கு நீர்ப் பாசன ஆதாரமாக உள்ள மேட்டூர், பெரியாறு, வைகை அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இதே போல் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனத்த மழை பெய்து வருகிறது.

கர்நாடகாவில் பெய்யும் மழையால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, ஹேமாவதி, கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன.

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 29,551 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 15 தினங்களாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் பெரியாறு அணையின் நீர் மட்டம் 7 அடி அதிகரித்துள்ளது. இதே போல் வைகை அணையின் நீர் மட்டமும் மூன்று அடி உயர்ந்துள்ளது.

இந்த இரண்டு அணைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் வைகை ஆற்றுப் பகுதி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் இரண்டாவது போகம் பயிர் செய்ய முடியும் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த இரண்டு அணைகளின் நீர் மட்டம் அதிகரிப்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்கும்.

கோவை நகரின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டமும் அதிகரித்து உள்ளது.
பொதுவாக இந்த வருடம் தென்மேற்கு பருவமழை தமிழகத்தை வஞ்சிக்கவில்லை என்றே கூறலாம்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக விநாடிக்கு 13,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 6,921 கன அடி, வெண்ணாற்றில் 7,528, கல்லணை கால்வாயில் 1,804 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 907 கன அடி தண்ணீர் பிரித்து திறந்துவிடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil