Publish Date: Sat, 09 Aug 2008 (13:55 IST)
Updated Date: Sat, 09 Aug 2008 (13:53 IST)
பட்டு நூல் உற்பத்தியை அதிகரிக்க, மெல்பரி பயிரிடும் அளவை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பட்டுப் பூச்சி கட்டும் கூடுகளில் இருந்து பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த பூச்சிகள் மெல்பரி இலையை உணவாக உட்கொள்கின்றன.
இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டு சேலை அளவுக்கு, இங்கு பட்டு நூல் உற்பத்தியாவதில்லை. இவை பெரும்பாலும் சீனாவிலி இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு பட்டு நூல் தேவையில் தன்னிறைவு அடைய மத்திய, மாநில பட்டு வளர்ச்சி வளர்ச்சி வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திலும், தமிழகத்தில் தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டம் உட்பட பல பகுதிகளில் பட்டுப் பூச்சி வளர்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதிகளின் மண் வளம், தட்ப வெட்ப நிலை மெல்பரி செடிகள் வளர்ப்பதற்கும், பட்டுப் பூச்சிகளை வளர்க்கவும் ஏற்றதாக இருக்கிறது.
பட்டு நூல் உற்பத்தியை அதிகரிக்கவும், பட்டுப் பூச்சி வளர்ப்பு தொழிலை விரிவுபடுத்தவும் பட்டு வளர்ப்பு வாரியம் (செரிகல்சர்)
மெல்பரி செடிகளை வளர்க்கும் பரப்பளவை அதிகரிக்கவும் உள்ளது.
இது குறித்து இந்த வாரியத்தின் ஆணையாளர் ஹர்மந்தர் சிங் நேற்று மாலை திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் அதிக அளவு மெல்பரி செடி வளர்ப்பில் மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மெல்பரி செடி வளர்க்கப்படுகின்றது. இங்கு வருடத்திற்கு 10 ஆயிரம் டன் பட்டுக் கூடுகள் உற்பத்தியாகின்றன. இதன் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மத்திய பட்டு வளர்ச்சி வாரியத்தின் உதவியுடன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் தானியங்கி பட்டு நூல் பிரிப்பு தொழிற்கூடம் நிறுவப்பட்டு வருகிறது. இது வரும் 23ஆம் தேதி முதல் செயல்பட துவங்கும்.
தனியார் துறையில் தொடங்க உள்ள இந்த தொழிற் கூடத்திற்கு மத்திய அரசு ரூ.25 லட்சமும், மாநில அரசு ரூ.15 லட்சமும் மானியமாக வழங்கியுள்ளன. இது வருடத்திற்கு 35 டன் பட்டு நூல் தயாரிக்கும் திறன் உடையது.
இதே போல் உடுமலைப் பேட்டையிலும் தனியார் துறையால் ஒரு பட்டு நூல் பிரிப்பு தொழிற் கூடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கும் மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க உள்ளன.
தற்போது பல இடங்களில் பட்டு நூல் பிரிப்பு குடிசை தொழிலாக இயங்கிவருகிறது. இதன் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வோதயா சங்கத்தால் நடத்தப்படும் 15 தொழிற் கூடங்கள் புதிய இயந்திரங்கள் வாங்க நிதி உதவி செய்யப்பட்டுள்ளன.
இத்துடன் பட்டு நூல் பிரிக்கும் நாட்கள் வரை, பட்டு கூட்டை பாதுகாக்கும் வகையில் மின் உலர் சாதனங்களை வாங்க 15 தொழிற் கூடங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
பட்டு வளர்ச்சி வாரியம் சென்ற நிதி ஆண்டில் (2007-08) மெல்பரி செடிகளை வளர்ப்பு, சொட்டு நீர் பாசனம், மற்ற கருவிகளை வாங்க 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.12 கோடி மானியம் வழங்கியுள்ளது. இந்த வருடம் மானியம் ரூ.18 கோடி வழங்கப்படும் என்று கூறினார்.
பட்டு பூச்சி வளர்ப்பு, மெல்பரி பயிரிடும் தொழில்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில்லை என்ற புகாருக்கு, ஹர்மந்தர் சிங் பதிலளிக்கையில், இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியுடன் (நபார்டு) இணைந்து வங்கி மேலாளர்களின் கூட்டம் கூடிய விரைவில் ஏற்பாடு செய்யப்படும். மெல்பரி பயிரிடப்படும் இடங்கள், பட்டு வளர்ப்பு தொழிற் கூடங்களுக்கு வங்கி அதிகாரிகளை அழைத்து சென்று இந்த தொழில் வளர்ச்சி, வர்த்தக வாய்ப்பு பற்றி விளக்கப்படும் என்று தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Sat, 09 Aug 2008 (13:55 IST)
Updated Date: Sat, 09 Aug 2008 (13:53 IST)