Publish Date: Sat, 02 Aug 2008 (12:43 IST)
Updated Date: Sat, 02 Aug 2008 (12:43 IST)
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்து சேர்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் தண்டோரா போட்டு எச்சரித்தனர்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால் அங்குள்ள கபினி, ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவில் மேலும் அதிகமானதால் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் சென்றது. தமிழகத்திற்கு வரும் காவிரிநீரை அளவிடும் பிலிகுண்டுலு பகுதியில் நேற்று காலை முதல் விநாடிக்கு 22,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்று அங்குள்ள மத்திய நீர்ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் காவிரியில் அதிக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் ஒகேனக்கல் காவிரி கரையோரமுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் நேற்று காலை தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்தனர்.
மேட்டூர் நீர்மட்டம் உயர்வு: கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை 52.66 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 53.76 அடியாக உயர்ந்தது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 18,140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 11,960 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு 23,137 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 12,094 நீர் திறந்து விடப்படுகிறது.
டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் இருந்து 5,501 கனஅடியும், வென்னாற்றில் இருந்து 510 கனஅடியும், கல்லணை கால்வாய் இருந்து 2,306 கனஅடியும், கொள்ளிடம் கால்வாய் இருந்து 800 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுகிறது.