Publish Date: Fri, 01 Aug 2008 (10:25 IST)
Updated Date: Fri, 01 Aug 2008 (10:25 IST)
கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹேரங்கி, கபினி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து நிரம்பி வருகின்றன.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்தும், கபினி அணையில் இருந்தும் 22,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சிகளிலும், அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்கிறது: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 18,596 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று மாலை மேட்டூர்அணை நீர்மட்டம் நேற்று மாலை 52.93 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 12,034 கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.