Publish Date: Sat, 26 Jul 2008 (10:22 IST)
Updated Date: Sat, 26 Jul 2008 (10:22 IST)
காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ள மேட்டூர் நீர் மட்டம் கடுமையாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 58 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 59.21 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,077 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து விநாடிக்கு 11,991 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்இருப்பு 24.10 டி.எம்.சியாக இருந்தது. பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட ஜூன் 12ம் தேதி நீர்மட்டம் 103.31 அடியாக இருந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாமல் நீர்வரத்து தொடர்ந்து குறைந்ததாலும், தினமும் அணையிலிருந்து சுமார் 1 டி.எம்.சி. வீதம் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 58.330 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10.27 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 11,999 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கல்லணையில் இருந்து 306 கனஅடியும், வென்னார் அணையில் இருந்து 7,302 கனஅடியும், கல்லணை கால்வாயில் இருந்து 934 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.