Publish Date: Wed, 25 Jun 2008 (12:20 IST)
Updated Date: Wed, 25 Jun 2008 (12:19 IST)
ஜூன் 30ஆம் தேதிக்கு மேல் டி.ஏ.பி. உரத்தை தனியார் விற்பனை செய்யக் கூடாது. ஜூலை 1ஆம் தேதியில் இருந்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே டி.ஏ.பி. உரம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக வேளாண் துறை செயலாளர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் டி.ஏ.பி. வினியோகம், தமிழக அரசு நிறுவனமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு இணையம் (டான்பெட்) மூலமாகவும், கோரமண்டல் மற்றும் ஜுவாரி ஆகிய தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் 2 வழிகளில் நடக்கிறது.
இதில், தமிழக அரசின் டான்பெட் நிறுவனம், இப்கோ மற்றும் ஐ.பி.எல். ஆகிய நிறுவனங்களிடமிருந்து உரத்தினை வாங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விற்பனை செய்து வருகின்றன. மங்களூர் நிறுவனத்தின் சரக்கு கொஞ்சம்தான். அதனால் அதை கணக்கில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
மீதமுள்ள கோரமண்டல் மற்றும் ஜுவாரி ஆகிய 2 நிறுவனங்கள் தாங்கள் சப்ளை செய்ததாகக் கூறும் டி.ஏ.பி. உரமூட்டைகள் சரியான முறையில் போய் விவசாயிகளை அடைந்ததா? என்று சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஜுவாரி நிறுவனம், 24 மொத்த வியாபாரிகளுக்கு டி.ஏ.பி. உரத்தை விற்பனை செய்கிறது. அவர்களிடமிருந்து சில்லரை வணிகர்கள் வாங்கி விற்கிறார்கள்.
இதுபோல், கோரமண்டல் நிறுவனம், தமிழகத்தில் உள்ள 840 சில்லரை வியாபார முகவர்கள் மூலமாக விற்பனையை செய்கிறது. இப்போது சில்லரை வியாபாரிகள் மற்றும் கோரமண்டல், ஜுவாரி நிறுவனங்கள் தரப்பில்தான் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இதனை விட குறைவான அளவு டி.ஏ.பி. சப்ளை செய்யப்பட்டது. ஆனால் இப்போது ஏற்பட்ட பிரச்சினை போல் அப்போது ஏதும் ஏற்படவில்லை. அப்போது, அரசு நிறுவனங்களான டான்பெட்டும், ஐ.பி.எல்-ம் மட்டுமே வினியோகத்தை மேற்கொண்டன. இப்போது தனியார் மூலம் உரம் வினியோகம் செய்யப்படுவது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறோம். தமிழகத்தில் டான்பெட்டில் அங்கமாக உள்ள 4,565 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவற்றில், 2,851 வங்கிகள் மட்டுமே உரம் விற்பனை செய்ய லைசென்ஸ் பெற்றுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, மீதமுள்ள 1,714 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கும் உரம் விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வரும் ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அனைத்து 4,565 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், டி.ஏ.பி. உரம் விற்பனை செய்யப்படும். அங்கு மட்டும்தான் இனி டி.ஏ.பி. விற்கப்படும். எனவே ஜூன் 30ஆம் தேதிக்கு மேலாக, சில்லரை வியாபாரிகளோ வேறு எந்த தனியாரோ டி.ஏ.பி. உரம் விற்பனை செய்யக்கூடாது. ஜூலை 1ஆம் தேதி அவர்களிடம் டி.ஏ.பி. உரம் இருப்பது தெரிந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
Webdunia
Publish Date: Wed, 25 Jun 2008 (12:20 IST)
Updated Date: Wed, 25 Jun 2008 (12:19 IST)