Publish Date: Thu, 19 Jun 2008 (20:49 IST)
Updated Date: Thu, 19 Jun 2008 (20:48 IST)
கோதுமை உற்பத்தி அரசின் மதிப்பீட்டை விட அதிகரித்துள்ளது. இந்த 2007-08 பருவத்தில் கோதுமை உற்பத்தி 780 லட்சம் டன்னாக உயரும். இது மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூன்றாம் மறு மதிப்பீட்டை விட அதிகம் எனபது குறிப்பிடத்தக்கது.
மத்திய வேளாண் அமைச்சகம் 2007-08 பருவத்தில் 767 லட்சத்து 80 ஆயிரம் டன் கோதுமை உற்பத்தியாகும் என்று மதிப்பீடு செய்திருந்தது. (2006-07 இல் 758 லட்சத்து 10 ஆயிரம் டன்).
மத்திய அரசு சார்பில் விவசாயிகளிடம் இருந்து கோதுமை கொள்முதல் செய்யும் இந்திய உணவு கழகமும், மாநில நுகர்பொருள் வாணிக கழகங்களும் இதுவரை 221 லட்சத்து 40 ஆயிரம் டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளன.
இவைகளுக்கு 150 லட்சம் டன் கோதுமைய கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இவை இலக்கை விட அதிகமாக கொள்முதல் செய்துள்ளன.
கோதுமையின் ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.1,000 ஆக மத்திய அரசு உயர்த்தியது. இதனால் விவசாயிகள் அதிக அளவு கோதுமை சாகுபடி செய்துள்ளனர். அத்துடன் பருவநிலையும் சாதகமாக இருந்ததால், உற்பத்தி அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் மத்திய அரசு கோதுமை கொள்முதல் செய்வது குறைந்தது. இதனால் அந்நிய நாடுகளில் இருந்து 73 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்தது.
மத்திய பிரதேசம்!
மத்திய பிரதேசத்தில் 23 லட்சம் டன் கோதுமையை இந்திய உணவு கழகமும், மார்க்பீட் என்ற கூட்டுறவு நிறுவனம், மத்திய பிரதேச நுகர்வோர் வாணிப கழகமும் இணைந்து 22 லட்சத்து 95 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்துள்ளன.
மத்திய அரசு வழங்கும் ஆதார விலையான குவின்டாலுக்கு ரூ.1,000 -த்துடன் கூடுதலாக மாநில அரசு குவின்டாலுக்கு ரூ.100 வழங்கியது.
மாநில நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு சங்கங்களின் துணையுடன் 925 மையங்களிலும், குறிப்பிட்ட சில மொத்த கொள்முதல் நிலையங்களிலும் (மண்டி) கோதுமை கொள்முதல் செய்தது.
மத்திய பிரதேசத்தில் கோசன்காபாத் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 2,57,414 டன் கொள்முதல் செய்யப்பட்டது. அத்துடன் ஹர்தா, உஜ்ஜியின், ரைசின், சேகூர், இந்தூர், திவாஸ், தர் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமாக கொள்முதல் செய்யப்பட்டது.