Newsworld Finance Agriculture 0805 28 1080528043_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேட்டூர் அணை திறப்பு எப்போது?

Advertiesment
மேட்டூர் அணை திறப்பு குறுவை சாகுபடி காவிரி
, புதன், 28 மே 2008 (17:43 IST)
காவிரி வடிநில பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வழக்கம் போல் ஜீன் 12 ந் தேதி திறக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த வருடம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறையாமல் இருப்புது காவிரி பாசன விவசாயிகளுக்கு மகழ்ச்சி அளித்துள்ளது. சென்ற வருடம் ஏழு தடவை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியது. கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 100.27 அடியாக இருந்தது (அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி).

அணைக்கு விநாடிக்கு 2,994 கன அடி தண்ணீர் வந்து கொண்ணிருக்கிறது. அதே நேரத்தில் அணையில் இருந்து விநாடிக்கு 841 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

சென்ற வருடம் அணையில் தண்ணீரின் அளவு குறைவாக இருந்தது. இதனால் குறுவை பாசனத்திற்கு ஜீன் 18ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆனால் இந்த வருடம் அணையில் போதுமான அளவிற்கு தண்ணீர் இருப்பில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 64.931 டி.எம்.சி. தண்ணீர் இருப்பில் இருப்பதால், குறுவை சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

ஜீன் 12ஆம் தேதி வழக்கம் போல் அணை திறக்கப்படும் போது, தொடக்கத்தில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறந்துவிடப்படும். படிப்படியாக அதிகரித்து பதினைந்து நாட்களுக்குள் 15,000 கன அடியாக அதிகரிக்கப்படும். ஒரு சில தினங்களில் தண்ணீர் திறந்து விடும் நாள் பற்றி அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று தெரிகிறது.

அரசு தண்ணீர் திறந்து விடும் நாளை கடைசி நேரத்தில் அறிவிக்காமல், முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். அப்போது தான் நிலத்தை தயார்படுத்த முடியும் என்று காவிரி வடிநில விவசாயிகள் கருதுகின்றனர்.

மயிலாடுதுறை பகுதி விவசாயிகள் ஜீன் 12ஆம் தேதிக்கு முன்பே, தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறுகின்றனர். இவ்வாறு வழக்கமான காலத்திற்கு முன்பு திறப்பதால், சாகுபடியை 15 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடலாம். இதனால் வடகிழக்கு பருவமழையால் அறுவடைக்கு தாயராக இருக்கும் பயிர் பாதிக்கப்படாது என்று கருதுகின்றனர்

சில பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளின் தண்ணீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி தொடங்கியுள்ளனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விவசாயிகள் எண்ணுகின்றனர். இதற்காக அணையில் இருந்து முன்னேர தண்ணீர் திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் சில பகுதி விவசாயிகள் மத்தியில் உள்ளது.

இதற்கு நேர் மாறாக, மற்றொரு தரப்பு விவசாயிகளின் கருத்து உள்ளது. இவர்கள் அரசு தென்மேற்கு மழை எந்த அளவு பெய்கிறது என்பதை பார்த்து, அதற்கு ஏற்றார் போல், அணையை தாமதமாக திறக்கலாம் என்று கருதுகின்றனர்.

கர்நாடாக அரசு அதன் அணைகள் நிரம்பு வழியும் வரை, மேட்டூர் அணைக்கு தண்ணீரை திறந்து விடாது. தற்போது கர்நாடாகாவில் கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளிலும் சேர்த்து 44.32 டி.எம்.சி. கன அடி தண்ணீர் உள்ளது. இவற்றின் மொத்த கொள்ளளவு 114 டி.எம்.சி.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனத்த மழை பெய்து, கர்நாடக அணைகள் நிரம்பினால் மட்டுமே, அந்த மாநிலம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடும். இந்நிலையில் தென் மேற்கு பருவ மழை பெய்வதை பார்த்து, அதற்கு ஏற்றார் போல் அணையை தாமதமாக திறக்கலாம் என்று கூறுகின்றனர்.

தற்போது கபினி அணையில் 8.064 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 19 டி.எம்.சி. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்து, அணை நிரம்பினால், இதிலிருந்து ஜீன் மாதத்தில் தண்ணீர் .திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை.

தற்போது மேட்டூர் அணையில் 40 முதல் 45 நாட்கள் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. அடுத்த மாதத்திலும், ஜீலை மாதத்திலும் அணைக்கு போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை எனில், காவேரி தண்ணீரை மட்டும் நம்பி விவசாயம் செய்பவர்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவார்கள். எனவே தென்மேற்கு பருவ மழையின் போக்கை பார்தது, அதற்கு பிறகு அணை திறப்பது பற்றி முடிவு எடுப்பதே சரியாக இருக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இதற்கு முன் 1995ஆம் ஆண்டு அணையில் 36.3 டி.எம்.சி தண்ணீர் இருப்பு இருந்த நிலையில் ஜூலை 3ஆம் தேதி அணை திறந்து விடப்பட்டது. பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தினால், குறுவையில் சாகுபடி செய்த முக்கால் பகுதி பயிர்கள் பாதிக்கப்பட்டன.

ஆனால் பாசன பகுதிகளில் கடை கோடியில் உள்ள விவசாயிகள், வழக்கம் போல் அணை திறக்க வேண்டும். அப்போதுதான் கடைகோடிக்கும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

தமிழக அரசு எப்போதும் வழக்கம் போல் ஜீன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க உத்தரவிடுமா அல்லது தென்மேற்கு பருவமழையின் போக்கை கண்காணித்து முடிவு எடுக்குமா என்பது சில தினங்களில் தெரிந்து விடும்.

இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை சராசரி அளவை விட அதிகளவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil