Publish Date: Tue, 22 Apr 2008 (13:01 IST)
Updated Date: Tue, 22 Apr 2008 (13:01 IST)
ஈரோடு மாவட்டத்தில் விவசாய பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால் அறுவடைக்கு தயாரான நெல் வயலில் காய்ந்து போகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதியாகும். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் நீர் ஆதாரத்தின் காரணமாக மாவட்டத்தில் இரண்டு லட்சத்து ஏழு ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.
கடந்த ஆண்டு பவானிசாகர் அணை தொடர்ந்து ஐந்து முறை நிரம்பியது. இதன் காரணமாக அணையில் இருந்து விவசாயத்திற்கு இரண்டு போகமும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்திருந்தனர்.
நடவு செய்யப்பட்ட நெற்பயிர் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. ஆனால் விவசாய கூலி வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆட்கள் தற்போது நூற்பாலைக்களுக்கு சென்றுவிட்டதால் விவசாய பணிக்கு போதிய ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
தற்போது அறுவடைக்கு தயாராய் இருக்கும் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் முதிர்ந்த நெற்பயிர் வயல்வெளியில் கடும் வெயிலில் காய்ந்து வீணாகும் நிலை உருவாகியுள்ளது.