Publish Date: Thu, 20 Mar 2008 (16:33 IST)
Updated Date: Thu, 20 Mar 2008 (16:33 IST)
தமிழகத்தில் பாசன வேளாண்மை, நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்படுத்தப்படும் நீர்வள நிலவளத் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.585 கோடி ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பாசன வேளாண்மை மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தி, 15.4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறச் செய்யும் நோக்கத்தில், உலக வங்கி உதவியுடன் ரூ.2,547 கோடி மதிப்பீட்டில் நீர்வள நிலவளத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டப்பணிகள் 2007-2008 ஆம் ஆண்டில், 9 துணை வடிநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2008-2009 ஆம் ஆண்டில் மேலும் 16 துணை வடிநிலங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்விரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் பணிகளால் 9.4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
இத்திட்டத்தின் வாயிலாக, பாசனப் பரப்பு அதிகரிப்பதோடு, விளைபொருள் உற்பத்தித் திறனும் விவசாயிகளின் வருவாயும் உயரும். இத்திட்டத்திற்காக 2008-2009 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ரூ. 585 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவல் சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.