Publish Date: Thu, 31 Jan 2008 (19:23 IST)
Updated Date: Thu, 31 Jan 2008 (19:22 IST)
மத்திய அரசின் நாசகரமான விவசாய கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் டெல்லியில் விவசாய அமைச்சகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணிக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள், நஷ்டமடைந்து தற்கொலை செய்து கொண்டதால் அனாதையான சிறுவர்கள், சிறுமிகளின் பிரதிநிதிகள் தலைமை தாங்கி சென்றனர். இதில் நூற்றுக் கணக்கான சிறுவர்கள், சிறுமிகள் கலந்து கொண்டு உணர்ச்சி பொங்க மத்திய அரசின் விவசாய கொள்கைகளுக்கு எதிர்ப்பு குரல் எழுப்பி சென்றனர்.
இந்த பேரணியை லோக் சங்காதன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
பேரணியின் முடிவில் லோக் சங்காதன் தலைவர் எஸ். ராகவன் விவசாய அமைச்சகத்திடம் சமர்பிக்க உள்ள கோரிக்கை மனுவை வாசித்தார்.
இதில் கடன் தொல்லை மற்றும் விவசாயத்தில் நஷ்டமடைந்ததால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குடும்பத் தலைவரை இழந்து வாடும் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை விவசாயி அமைச்ச்கம் உடனே உறுதிபடுத்த வேண்டும்.இந்த குடும்பங்களுக்கு தலா ரு.1 கோடி நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். அவர்களின் எல்லா கடனையும் ரத்து செய்ய வேண்டும்.
விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியாக கூடிய விலையை உறுதிபடுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் விவசாயிகளுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு தடை விதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கி இருந்தன.
இந்த கோரிக்கை மனு விவசாய அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது.
கோதுமைக்கு அளிக்கப்பட்டதைப் போல நெல்லிற்கும் குவிண்டாலிற்கு ரூ.1,000 அளிக்க வேண்டும் என்று கோரி தமிழக விவசாயிகள் டெல்லி சென்று நாடாளுமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்று பஞ்சாப் விவசாயிகள் துயரை நாட்டின் பார்வைக்குக் கொண்டு வர இப்பேரணி நடத்தப்பட்டுள்ளது.
நமது நாட்டில் 2007 ஆம் ஆண்டில் மட்டும் 17,000-த்திற்கும் அதிகமான விவசாயிகள் இப்படி கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.