Publish Date: Wed, 02 Jan 2008 (13:11 IST)
Updated Date: Wed, 02 Jan 2008 (13:10 IST)
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவேரி பாசன பகுதிகளில் சென்ற மாதம் 14 ந் தேதி மழை பெய்த காரணத்தினால், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. கடந்த வாரம் முழுவதும் பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் குறைந்த பட்ச அளவான விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று காலை 6 மணி முதல் தண்ணீர் திறந்து விடுவது அதிகரிக்கப்பட்டது. இதன் படி விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டது. இன்று மாலைக்குள் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.7 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
அணைக்கு விநாடிக்கு 1,094 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.