Publish Date: Mon, 24 Dec 2007 (15:28 IST)
Updated Date: Mon, 24 Dec 2007 (15:28 IST)
இலங்கையில் கிராம்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கிராம்பு விலை அதிகரிக்கும்.
இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கையில் இருந்து கிராம்பை இறக்குமதி செய்கின்றன. இது உணவுக்கு சுவை, மணம் அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் கிராம்பில் இருந்து எடுக்கப்படும் கிராம்பு தைலம் பல்வேறு மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
உலக அளவில் கிராம்பு அதிகளவு விளையும் இலங்கையில் கிராம்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு அடுத்த வருடம் 5 ஆயிரம் டன் உற்பத்தியாகும் என்று முன்பு மதிப்பிடப்பட்டது. ஆனால் பருவநிலை பாதிப்பால் கிராம்பு உற்பத்தி குறையும் என கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 2 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தியாகும்.
இலங்கையில் இருந்து அடுத்த ஆண்டு இந்தியா இந்த வருடம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 9 மாதத்தில் 3,610 டன் இறக்குமதி செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.44 கோடியே 33 லட்சம்.
அடுத்த வருடம் 1,800 டன் கிராம்பு இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் அடுத்த வருடம் கிராம்பு உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் இதன் விலை 1 டன் 6 ஆயிரம் டாலர் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.