Publish Date: Wed, 21 Nov 2007 (14:45 IST)
Updated Date: Wed, 21 Nov 2007 (14:45 IST)
தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் சென்றாண்டு ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றது என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில நெல் உற்பத்தியில் சென்றாண்டு ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 717 மி.மீ., நவம்பர் முடிய இயல்பு மழையளவு 683 மி.மீ., இதுவரை மழையளவு 540 மி.மீ. பெறப்பட்டது.
இது 143 மி.மீ. குறைவாகும். ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒற்றை நாற்று நடவு என்னும் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் 25 ஏக்கர் கொண்ட செயல் விளக்கங்கள் 20 இடத்தில் அரசு மானியம் ரூ. 5 லட்சத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் முதன் முறையாக வேளாண் துறையினர் சீனா, கொரியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள எந்திரம் மூலம் நெல் நாற்று நடவு செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளனர். தாராபுரம் பகுதியில் 200 ஏக்கரில் எந்திர நடவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு கூலியாள் பற்றாக்குறைய எந்திரநடவு பெருமளவில் தீர்க்கும். கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும். விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து மகசூலை அதிகரிக்க செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 47 டன் மகசூல் கரும்பு கிடைக்கிறது. கடந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவு சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு பயிரிடப்பட்டது. இந்தாண்டு இது 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவாக அதிகரிக்கும்.
சத்தியமங்கலம், சென்னம்பட்டியில் வாழை விவசாயிகள் அதிகம் உள்ளனர். காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. வாழை விவசாயிகளுக்கு காப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. மரவள்ளிக் கிழங்குக்கு சரியான விலை கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.இதற்கு இடைத்தரகர்களே காரணம். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Webdunia
Publish Date: Wed, 21 Nov 2007 (14:45 IST)
Updated Date: Wed, 21 Nov 2007 (14:45 IST)