Publish Date: Fri, 02 Nov 2007 (20:52 IST)
Updated Date: Fri, 02 Nov 2007 (20:51 IST)
நவம்பர் மாதத்தில் வங்கக் கடலில் 3 முதல் 4 முறை காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி அதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று இதுகுறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்!
தற்போதைய வானிலை கணிப்பின்படியும், மழை தேதியின் கணிப்பின்படியும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் மாதம் 3 முதல் 4 முறை நாகைக்கு தெற்கு மற்றும் கடலூர், புதுச்சேரி அருகே உருவாகும் வாய்ப்புள்ளது. நவம்பர் 2 ஆம் தேதி முதல் தென்மேற்கு வங்கக் கடலில் நாகைக்கு தெற்கே உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நவம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரையும், 8 முதல் 11 ஆம் தேதி வரையும் மிதமான மற்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளது. 14 முதல் 27 ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழையும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரையும் பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் மாதம் 14 முதல் 20 ஆம் தேதி வரையும், 23 முதல் 27 ஆம் தேதி வரையும் பலத்த மழைக்கான வாய்ப்புள்ள தேதிகள் ஆகும்.
மேலும் நவம்பர் மாதம் 16 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. கணிப்பு பகுதி இந்தோனேசியா, ஜப்பான். அந்த தேதிகளிலோ அல்லது 3 நாட்கள் வித்யாசத்திலோ உலகின் பிற இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.