Publish Date: Thu, 01 Nov 2007 (10:47 IST)
Updated Date: Thu, 01 Nov 2007 (10:46 IST)
மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழையில் காவேரி பாசனப் பகுதிகளிலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சாகுபடி செய்த நிலத்தில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நாசமாகி உள்ளன. இதற்கு மாநில அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏரிகள், கால்வாய்கள், கண்மாய்கள் உடைந்து வேளாண் பயிர்களும், ஏழை மக்களின் குடிசைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மட்டும் ஆறரை லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி அழிந்துள்ளன. அறுவை செய்ய வேண்டிய குறுவை சாகுபடியும் அழிந்துள்ளது. நிலக்கடலை, மரவள்ளி, வாழை, கரும்பு உட்பட அனைத்து பயிர்களும் சேதமடைந்து வருகின்றன.
ஏராளமான கிராமங்களில் வெள்ளம் புகுந்து குடிசைகள் சூழ்ந்துள்ளன. மூன்று லட்சம் மக்கள் குடிசைகளை விட்டு வெளியேறியுள்ளனர். சில லட்சம் மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். 22 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
சேசமடைந்த நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமும், நிலக்கடலை, வாழை, கரும்பு உட்பட இதர பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசியும், வேலை கிடைக்கும் வரை நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும். இடிந்து போன வீடுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும். தமிழகத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
உபரி தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தும் மாற்று ஏற்பாடுகள் இல்லாததால். இத்தகைய இயற்கை இடர்பாடுகள் தொடர்கதையாகி வருகின்றன.வெள்ளத்தை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.