Publish Date: Mon, 29 Oct 2007 (11:11 IST)
Updated Date: Mon, 29 Oct 2007 (11:11 IST)
தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து வருமானால் இன்னும் ஓரிரு நாளில் அணை நிரம்பும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 117 அடியாக இருந்தது.
இன்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 908 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த சில நாட்களாக டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வீதம் திறந்து விடப்பட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் நேற்று மாலை 100 கனஅடியாக குறைக்கப்பட்டது.
அணைக்கு இப்போது வருவதுபோல நீர்வரத்து தொடர்ந்து நீடிக்குமானால் மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று தெரிகிறது. இந்த ஆண்டில் 7-வது முறையாக அணை நிரம்பி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Webdunia
Publish Date: Mon, 29 Oct 2007 (11:11 IST)
Updated Date: Mon, 29 Oct 2007 (11:11 IST)