Publish Date: Tue, 23 Oct 2007 (14:05 IST)
Updated Date: Tue, 23 Oct 2007 (13:14 IST)
தேயிலை, மிளகு, காஃபி, ஏலக்காய் போன்ற தோட்டங்களில் உள்ள பழைய செடிகளை அகற்றிவிட்டு புதிய செடிகளை நட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் கேட்டுக் கொண்டார்.
புது டெல்லியில் பண்டக பரிவர்த்தணை வாரியத்தின் தலைவர்கள், இதில் வர்த்தகம் செய்பவர்களின் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று கமல்நாத் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள காஃபி, தேயிலை, ஏலக்காய், மிளகு போன்ற பணப் பயிர் தோட்டங்களில் உள்ள பழைய செடிகளுக்கு பதிலாக புதிய செடிகளை நடவேண்டும். அதிகளவு மகசூல் கொடுக்காத செடிகளின் உயிரணுவில் ஊட்ட சத்து செலுத்த வேண்டும். ஏனெனில் விவசாய துறையில் தோட்ட பயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் விவசாய விளை பொருட்கள் ஏற்றுமதியில் தோட்டப் பயிர்களின் பங்கு 15 விழுக்காடாக உள்ளது.
இதில் காஃபி, ரப்பர் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.அத்துடன் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் தோட்டங்களின் மூலம் கிடைக்கும் பணப் பயிர்களின் பங்கு கணிசமான அளவு உள்ளது. இதில் சுமார் 2 கோடி பேர் வரை வேலை பார்க்கின்றனர்.
ஜனவரி மாதத்தில் தேயிலை தோடடங்களின் செடிகளை மாற்றுவதற்காக ரூ. 4,761 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தி நிதி 2 இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு உள்ள தேயிலை தோட்டங்களின் உற்பத்தி, வருவாயை மேம்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 15 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
இந்த வருட தொடக்கத்தில் நலிவுற்ற 33 தேயிலை தோட்டங்களை சீரமைக்க நிதி உதவி அறிவிக்கபட்டது. இதில் ஒன்பது தேயிலை தோட்டங்கள் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.
இந்தியாவில் இருந்து மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமணப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் அவை தரமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றன. இந்த தரத்தை சோதிப்பதற்கும், தரத்தை அதிகரிக்கவும் கொச்சியில் நவீன பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற பரிசோதனை கூடங்கள் குண்டூர், டில்லி, மும்பை ஆகிய நகரங்களிலும் அமைக்கப்படும்.
நறுமணப் பொருட்கள் தொழில் பூங்காக்களை இடுக்கி, குண்டூர், ரா-பேரலி, ஈரோடு, கோடா, சின்டிவாரா ஆகிய நகரங்களிலும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் நறுமணப் பொருட்கள் விஞ்ஞான முறையில் பதப்படுத்தபடும். இதன் வாயிலாக அவைகளின் தரம் உயர்த்தப்படும்.
இந்த தொழிற் பூங்காக்களில் சுத்தப்படுத்துதல், கழுவுதல், நீராவியில் பதப்படுத்துதல், பண்டல்களில் அடைத்தல், குளிர்சாதன வசதிகளுடன் கூடிய கிடங்கு ஆகியவை அமைந்திருக்கும். இதில் விவசாயிகள், வியாபாரிகள், பதப்படுத்தும் ஊழியர்கள், மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு நறுமணப் பொருட்களில் மதிப்பு கூட்டுவது, தரத்தை பராமரிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்தியாவில் இருந்து புகையிலை ஏற்றுமதியாளர்களின் நஷ்டம் அடைந்தால் அதை ஈடு செய்யும் வகையில், இந்திய ஏற்றுமதி கடன் வாரியத்தில் சிறப்பு காப்பீடு வசதி செய்வது பற்றி அரசு பரிசீலிக்கும்.
நறுமணப் பொருட்கள் தொழில் நுட்ப கழகம் அமைக்கப்படும். இது இத்துறையில் ஆராய்ச்சி மேற் கொள்வதுடன், சந்தை நிலவரத்தையும் கணித்து அறிவிக்கும் என்று கமல் நாத் கூறினார்.
இந்தியாவில் உள்ள பணப் பயிர் தோட்டங்களில் விளைச்சல், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள செடிகள் பல வருடங்களுக்கு முன் நடப்பட்டவை. இந்த செடிகளின் திசுக்களில் ஊட்டச் சத்து குறைவாக இருப்பதால் விளைச்சல் குறைவாக உள்ளது. இவைகளின் விளைச்சல் திறன் குறைந்து விட்டது. இந்த செடிகளை எடுத்து விட்டு புதிய செடிகளை நடவேண்டும் என்று விவசாய நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
விவசாயி நிபுணர்கள் கூறுவது போல், பழைய செடிகளை மாற்றி புதிய செடிகள் நட்டால் அதிலிருந்து விளைச்சல் பெற குறிப்பிட்ட காலமாகும். இதற்கு செலவு ஆவதுடன், வருமான இழப்பும் ஏற்படும். இது போன்ற பல்வேறு காரணங்களால் பணப் பயிர் தோட்ட உரிமையாளர்கள், பழைய செடிகளுக்கு பதிலாக புதிய செடிகளை மாற்ற கவனம் செலுத்துவதில்லை. இதனால் இந்தியாவின் தோட்டப் பணப் பயிர்களின் உற்பத்தி குறைவதுடன், அவற்றின் தரமும் குறைகின்றது. சர்வதேச தரத்திற்கு இணையாக இல்லாத காரணத்தினால், ஏற்றுமதி வாய்ப்பும் குறைகின்றது. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டுள்ளது.
Webdunia
Publish Date: Tue, 23 Oct 2007 (14:05 IST)
Updated Date: Tue, 23 Oct 2007 (13:14 IST)