Publish Date: Mon, 22 Oct 2007 (19:52 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ.1000 ஆக உயர்த்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பா. ஜனதா கட்சி தலைவருமான எல். கே. அத்வானி கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சனிக்கிழமையன்று எழுதியுள்ள கடிதத்தில் அத்வானி கூறியிருப்பதாவது:
நெல் உற்பத்தி செலவுக்கும், அரசு கொளமுதல் செய்யும் விலைக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்ற கருத்து விவசாயிகள் மத்தியில் உள்ளது. இதனால் விவசாயிகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக தென் மாநில விவசாயிகள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது.
அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கோதுமை விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் நெல் விவசாயிகளிடம் பாராபட்சமாக நடந்து கொள்கிறது என்ற நினைக்கின்றனர்.
பல விவசாய சங்கங்கள் தன்னிடம் கடந்த சில ஆண்டுகளாக நெல் உற்பத்தி செய்வதற்காக தேவைப்படும் உரம், பூச்சி மருந்து, ஆட்கள் கூலி, நீர் பாசன செலவு, மின்சார கட்டணம், போக்குவரத்து செலவு ஆகியவை அதிகரித்து விட்டன. ஆனால் இந்த உற்பத்தி செலவுக்கும் குறைவாக நெல் கொள்முதல் விலை உள்ளது என்று என்னை அணுகி தெரிவித்தன.
கோதுமை கொள்முதல் விலையை அதிகரித்திருப்பது பாராட்டுக்குறியது. அதே நேரத்தில் நெல் விவசாயிகளின் பிரச்சனையிலும் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார்.
அத்துடன் அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கரும்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை அனைவரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக ஆந்திராவில் இருந்து டெல்லிக்கு நான்கு விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தெலுங்கான பகுதியில் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த பகுதியில் குறிப்பிட்ட கால வரையறுக்குள் பாசன வசதிகளை ஏற்படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களின் விலை குறையும் போது, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நிதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அத்வானி குறிப்பிட்டுள்ளார்.