Publish Date: Thu, 11 Oct 2007 (20:42 IST)
Updated Date: Thu, 11 Oct 2007 (20:41 IST)
வாழைப் பயிருக்கு தற்போதுள்ள பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று திருச்சி மாவட்ட வாழை விவசாயிகள் கோரியுள்ளனர்.
திருச்சி மாவட்ட வாழை விவசாயிகள் சங்கத்தின் ஆண்டு விழா லால்குடியில் நடைபெற்றது.
இதில் புயல் சூறைக் காற்று மழை வெள்ளம் ஆகிய இயற்கை இடர்களினால் வாழை பயிர் பாதிக்கப்படும் போது, விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
தற்போது இழப்பீடு சராசரியாக கணக்கிடப்படுகிறது. இந்த முறையை மாற்றி ஒவ்வொரு பகுயிலும் உண்டாகியுள்ள சேதத்தையும், தனிப்பட்ட வாழை விவசாயிக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை கணக்கிடும் வகையில் காப்பீடு திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
காப்பீட்டிற்கு கட்டும் பிரிமியத்தை, விவசாயிகளின் சென்ற வருட வருமானத்தை கணக்கிட்டு நிர்ணயிக்க வேண்டும். வங்கிகள் வழங்கும் கடன் அடிப்படையில் பிரிமியத்தை நிர்ணயிக்க கூடாது.
திருச்சியிலும், திருச்சியை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அதிகளவு வாழை பயிர் செய்யப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு திருச்சியில் வாழை ஏற்றுமதி சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க வேண்டும்.
இந்த பகுதியில் வாழை ஏற்றுமதி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டால் ஏற்றுமதிக்கு உரிய ரக வாழையை விவசாயிகள் பயிரிடுவார்கள். இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.
வாழைக்காய், வாழைப்பழம் ஆகியவை சில நாட்களில் அழுகும் தன்மை உடையது. எனவே இதை பாதுகாக்க திருச்சி மாவட்டத்தில் குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன் இந்த கூட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தில் வாழைப்பழத்தையும் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Webdunia
Publish Date: Thu, 11 Oct 2007 (20:42 IST)
Updated Date: Thu, 11 Oct 2007 (20:41 IST)