Publish Date: Wed, 18 Jul 2007 (09:45 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:00 IST)
கர்நாடக அணைகளில் இருந்து பெருமளவிற்கு உபரி நீர் திறந்துவிடப்படுவதை அடுத்து நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் மேட்டூர் அணை இன்று திறக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்!
ஜூலை 25 ஆம் தேதி முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படும் என்று கடந்த 11 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிணயைத் தாண்டிவிட்ட நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. நேற்று காலை வரை 41,000 கன அடியாக இருந்த நீர் வரத்து நண்பகலில் விநாடிக்கு 51,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் உற்பத்தித் தலங்களில் தென்மேற்கு பருவ மழை நன்கு பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று காலை நிலவரப்படி 103,60 அடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.