2007ம் ஆண்டு இப்போதுதான் பிறந்தது. இதோ ஓடி விட்டது முதல் மாதம். ஜனவரி இறுதிக்கு வந்துவிட்டோம் அதுவும் பத்தாவது, பணிரெண்டாவது போன்ற பொதுத் தேர்வைச் சந்திக்கும் மாணவர்களுக்கு நாள்களும் மாதங்களும் நொடிகளாய்ப் பறப்பது போலிருக்கும். அவர்கள் பொழுதுகளைப் பொன்னாக்கிக் கொண்டிருக்கும் நேரம்.
அதிக மனச்சுமை இல்லாமல் தன்னம்பிக்கையை அவர்களின் மனங்களில் தேக்கி, வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க இதோ ஒரு வழி. அதுதான், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கணினி வழியாக மாணவர்களின் ஐயங்களைத் தீர்ப்பதற்குச் செய்துள்ள ஏற்பாடு.
"சக்சத்" இணையதளம் மூலம் இந்த இருவழி ஐயத் தீர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 11, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், ஆங்கிலம், கணக்கியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் மிகுந்த பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.
நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை கீழ்க்காணும் இணையதளங்களுக்குள் சென்று மாணவர்கள் தங்கள் ஐயங்களைக் கேட்கலாம். அவற்றை தெளிவுபடுத்துவதற்காக பழுத்த அனுபவமும் தேர்ச்சியுமிக்க ஆசிரியர்கள் ஆன்லைனில் இருப்பார்கள்.
உங்கள் பயன்பாட்டிற்காக காத்திருக்கும் இணையதள முகவரிகள்
<http://www.sakshat.ac.in>
<http://www.sakshat.ignou.ac.in/sakshat/intex.aspx>
<http://shakshat.gov.in>