அயல்நாட்டில் வேலை தேடுபவர்களின் வசதிக்காகவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாடு முழுவதும் சிறப்பு வேலை வாய்ப்பு கண்காட்சிகள் நடத்த மத்திய அயல்நாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மேலும், உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றி ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
அயல்நாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைப்பின் (சி.பி.ஓ.இ) முதலாவது நிர்வாகக் குழு கூட்டம் அமைச்சக செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் டெல்லியில் நடந்தது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு :
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு துறைகளிலும் தகுதி, திறமை வாய்ந்தவர்கள் ஏராளமாக தேவைப்படுகிறார்கள். எந்த நாட்டில் எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு என்னென்ன கல்வித் தகுதிகள் தேவைப்படுகிறது.
இத்தகைய கல்வித் தகுதிகளுடன் இந்தியாவில் எத்தனை பேர் இருக்கின்றனர், அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு திறமையானவர்களை எந்த வகையில் உருவாக்க வேண்டும் என விளக்கமாக ஆய்வுகள் நடத்த வேண்டும். இதன் அடிப்படையில் தகுதி, திறமை, அனுபவம் வாய்ந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அயல்நாட்டு வேலை விரும்பும் இந்தியர்களிடம் அதற்கான கல்வித் தகுதி, அனுபவம், தொழில் பயிற்சி இருக்கிறதா, இங்குள்ள கல்வித் திட்டத்தில் அளிக்கப்படும் தொழிற்பயிற்சி போதுமானதாக உள்ளதா, சர்வதேச வேலை வாய்ப்புகளை பெற கூடுதல் பயிற்சிகள் அளிக்க வேண்டுமா என்பது குறித்தும் பரிந்துரை செய்ய வேண்டும்.
மருத்துவம், வீட்டு வேலை செய்தல், வரவேற்பு, உபசரித்தல் உள்ளிட்ட சேவைத் துறைகளிலும் சர்வதேச வேலை வாய்ப்புகளை பெறும் அளவுக்கு இந்தியர்களிடம் திறமையை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாடுகளின் அடிப்படையிலும், தொழில்களின் அடிப்படையிலும் நாட்டின் பல பகுதிகளிலும் வேலை வாய்ப்பு கண்காட்சிகளை நடத்த அயல்நாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வேலை தேடுபவர்கள், வேலைக்கு ஆள் எடுக்கும் முகவர்கள் ஆகியோர் சந்தித்துக் கொள்ள இதுபோன்ற கண்காட்சிகள் உதவும். அயல்நாட்டு வேலை வாய்ப்பு, அதற்கு தேவையான கல்வித் தகுதி, திறமைகள், அனுபவம் ஆகியவற்றை விளக்கும் வகையில் கருத்தரங்குகள் நடத்தவும் இந்த அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.