Publish Date: Fri, 06 Feb 2009 (12:09 IST)
Updated Date: Fri, 06 Feb 2009 (12:09 IST)
பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியாக கடந்த 3 மாதத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர்.
அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலானது, வங்கிகளின் நிதிநிலை மோசமடைந்ததன் காரணமாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் உலக பொருளாதாரத்தையே வீழ்ச்சி அடைய செய்தது. முன்னணி நிறுவனங்களும் இந்த வீழ்ச்சியில் இருந்து தப்பமுடியவில்லை. இதனால் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
இது குறித்து மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் தொழிலாளர் பிரிவு இந்தியா முழுவதும் அவசரகால ஆய்வு நடத்தியது. அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளது கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 முதல் 24-ந் தேதி வரை நடத்திய ஆய்வின்படி, டெக்ஸ்டைல்ஸ், சுரங்கதுறை, உலோகம், வாகன உதிரிபாகம், தங்க வியாபாரம், கட்டுமானம், போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பம் போன்ற வேலைகளில் செப்டம்பர் மாதம் கணக்குப்படி 1 கோடியே 62 லட்சம் பேர் வேலை பார்த்தனர்.
ஆனால், அக்டோபர் மாதத்தில் 1 கோடியே 60 லட்சமாகவும், நவம்பரில் 1 கோடியே 59 லட்சமாகவும், டிசம்பரில் 1 கோடியே 57 லட்சமாகவும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. 3 மாதத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர்.
குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே இந்த ஆய்வு எடுக்கப்பட்டாலும், அதில் மட்டுமே மிக மோசமான தொழிலாளர் வீழ்ச்சியை கண்டுள்ளது. சுற்றுலா சேவை, நிதி சேவை ஆகிய துறைகளில் இந்த ஆய்வு எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.