Publish Date: Fri, 26 Dec 2008 (14:20 IST)
Updated Date: Fri, 26 Dec 2008 (14:20 IST)
வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு டிசம்பர் 28ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
7,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அண்மையில் உயர் நீதிமன்றம் நீக்கியது.
இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் தெரிவு பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதில் தொடக்கக் கல்வித்துறைக்குத் தேர்வு பெற்றவர்களுக்கு, டிசம்பர் 28ஆம் தேதி முதல் கோடம்பாக்கம், பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கணித பாடத்திற்கான (1 முதல் 420 வரை) கலந்தாய்வு 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
கணிதத்தில் 421 முதல் 844 வரையுள்ளவர்களுக்கும், ஆங்கிலப் பாடத்தில் எண் ஒன்று முதல் 593 வரை உள்ளவர்களுக்கும் 29ஆம் தேதி (திங்கட்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது.
அறிவியல் பாடம் முழுவதற்கும் டிசம்பர் 31ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டப் பணியிடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
தினமும் காலை 10 மணி முதல் நடைபெறும் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள வருபவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதத்தை கொண்டுவர வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.