Publish Date: Sat, 20 Dec 2008 (12:49 IST)
Updated Date: Sat, 20 Dec 2008 (12:48 IST)
வேலையில்லாத அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுடலைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டுக் கழகம் சார்பில் இளைஞர்களுக்கான இலவச தொழிற்பயிற்சி இருபாலருக்கும் அளிக்கப்பட உள்ளது. இதற்கான வயது வரம்பு 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
சுய உதவிக்குழுவில் உள்ள மேற்படி தகுதியுள்ளவர்கள் மற்றும் வறுமைக்கோடு பட்டியலில் உள்ள வேலை இல்லா இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி 1 மாதம் முதல் 3 மாதம் வரை வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் தொழிற் பயிற்சியானது அருகாமையில் உள்ள ஊரிலோ அல்லது சற்று தொலைவிலோ நடைபெறும். இதன் விவரம் பின்பு தெரிவிக்கப்படும். மேற்படி வெளியூரில் தங்கி படிப்பதற்கு விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின்போது ஒரு நாளைக்கு ரூ.25-க்கு குறையாமல் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சிக்கான அனைத்து செலவினங்களும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். பயிற்சி முடிந்தவுடன் சம்பந்தத்பட்ட பயிற்சி நிறுவனத்தால் வேலைக்கு உத்தரவாதம் அளித்து வேலை வாங்கி தரப்படும்.
ஆகவே விருப்பமுள்ள இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலோ அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் அரியலூர், ஜெயங்கொண்டம், திருமானூர், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.